சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 12 காவலர்கள் உயிரிழந்தனர்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள சுக்மா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சாலை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில், சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர், 5 வீரர்கள் காயமடைந்தனர். சாலை திறப்பு நிகழ்ச்சிகாக 112 பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். பேஜி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது திடீரென நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். உயிரிழந்த வீரர்களிடமிருந்து நக்சல்கள் ஆயுதங்களையும் கைப்பற்றி சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டறிந்ததார்.