இந்தியா

கார்-லாரி மோதல்: 10 பேர் பரிதாப பலி!

webteam

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் மராத்வாடா வட்டாரத்தில் உள்ளது நான்தேட் (Nanded) நகரம். இது, மராத்வாடாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரம். சீக்கியர்களின் புனித இடமாகவும் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலம். இங்கு தரிசிப்பதற்காக பஞ்சாப்பை சேர்ந்த குடும்பம் ஒன்றும் மூன்று காரில் வந்துகொண்டிருந்தது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் யவட்மால் மாவட்டத்தில் உள்ள கோஸ்டானி காட் என்ற பகுதியின் அருகே இன்று அதிகாலை வந்த போது அவர்கள் வந்த கார்களில் ஒன்று எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 12 பேரில் 10 பேர் உடல் நசுங்கி அங்கேயே பலியானார்கள். இதில் நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், 2 பேர் குழந்தைகள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.