இந்தியா

'ஜப்பானுக்கு மழை தரும் கேரள மேகங்கள்': அங்கும் ஒரு விஞ்ஞானி எம்எல்ஏ

webteam

கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மழை மேகங்கள்தான் ஜப்பானுக்கு மழை தருகின்றன என்று கேரள எம்எல்ஏ ஒருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் உள்ள நிலம்பூர் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.வி.அன்வர். மலப்புரம் மாவட்டம் கக்கடம்பொய்யில் கிராமத்தில் தண்ணீர் தீம் பார்க் ஒன்றை உரிய அனுமதி பெறாமல் அன்வர் கட்டியுள்ளார். தீம் பார்க்கின் தண்ணீர் தேவைக்காக சாலியார் ஆற்றில் தடுப்பணை கட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், பழங்குடி மக்களின் குடிநீர் தேவைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

எனவே அங்குள்ள மக்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் திணறிப்போன எம்எல்ஏ, செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ’கேரளாவின் குடிநீர் திட்டங்களுக்கு ஜப்பான் நிதி கொடுப்பது ஏன் தெரியுமா? கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகும் மழை மேகங்கள்தான் ஜப்பானுக்கு மழை தருகின்றன. அதனால்தான் ஜப்பான் உதவி செய்கிறது’ என்றார்.

மேலும், ’கேரளாவில் பாயும் ஆறுகள் எல்லாம் கடைசியாக அரபிக்கடலில் கலக்கும். அந்த தண்ணீர் ஆவியாகி மேகமாக மாறும். அந்த மழை மேகங்கள் நேராக ஜப்பானுக்குப் போய் அங்கு மழையாய் கொட்டும்’ என்று சொல்லி நிருபர்களை கிறுகிறுக்க வைத்தார்.

அன்வரின் இந்த விசித்திரமான கருத்துகள்தான் இப்போது கேரளாவின் ஹாட் டாபிக். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யுடியூப், மீம்ஸ், வீடியோ, கார்டூன் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவைப் போல அன்வரை கலாய்த்து வருகின்றனர் கேரள நெட்டிசன்கள்.