இந்தியா

‘கடத்தல்காரரை பிடித்தால் முதல்வர்மனைவிக்கு கோபம் வரும் என்றார்கள்’ பெண் போலீஸ் வாக்குமூலம்

EllusamyKarthik

மணிப்பூர் மாநில போதைப்பொருள் தடுப்பு காவல் பிரிவின் முதுநிலை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் தனுஜம் பிருந்தா. போதை வஸ்துகளை கடத்தும்  குற்றவாளிகளை பிடிப்பதில் வல்லவர் என பெயரெடுத்தவர். 

அவர் கடந்த 2018இல் ஸூவோ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அவரது கூட்டாளிகளுடன் கைது செய்தார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸுவோவை விடுவிக்குமாறு மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் அழுத்தம் கொடுத்ததை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பிருந்தா. அதனையடுத்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் தனக்கு முதல்வர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார் பிருந்தா.

அதில் அவர் தெரிவித்துள்ளது “கடத்தல்காரர் ஸுவோவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அழுத்தம் கொடுத்தனர். ஸுவோவை கைது செய்தால் முதல்வர் பைரேன் சிங்கின் மனைவி ஆலிஸ் கோபம் அடைவர் என என்னிடம் சொன்னார்கள். அதை நான் செய்யாமல் இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்ப பெறுமாறும் முதல்வர் தரப்பில் இருந்து எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.