உலக நுரையீரல் புற்றுநோய் தினம் முகநூல்
ஹெல்த்

புகைப்பிடிப்பதை உடனே நிறுத்தலாமா? பிறர் புகைத்து வெளிவிடும் புகை அருகில் இருப்பவரையும் பாதிக்குமா?

ஜெனிட்டா ரோஸ்லின்

உயிர்வாழ எப்படி, உணவு, உடை , இருப்பிடம் அத்தியாவசியங்களில் ஒன்றாக கருதப்படுகிறதோ, அனைவருக்கும் தெரிந்தும் கூறப்படாத ஒன்றுதான் சுவாசிப்பது.

சுவாசத்தில் முக்கிய பங்கு வகிப்பது நுரையீரல். ஆனால், அந்த நுரையீரலுக்கு பாதிப்பு வந்துவிட்டால், உயிர்வாழ்வதே கேள்வி குறியாகிவிடும். பொதுவாக நுரையீரலுக்கு தேவை மாசு இல்லாத சுத்தமான காற்று. ஆனால், சுத்தமான காற்று இப்போதுள்ள காலங்களில் கிடைக்கிறதா என்றால் கட்டாயம் இல்லை. காற்று மாசு, புகைப்பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் காற்றிலும் நச்சுத்தன்மை கலந்து விடுகிறது.

இதனால், பாதிப்படையும் நுரையீரல் இறுதியில் நுரையீரல் புற்றுநோயில் வந்து சேர்கிறது. எனவே, நுரையீரல் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தவகையில், நுரையீரல் புற்றுநோய் தொடர்பான நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களையும் வழங்குகிறார் நுரையீரல் மருத்துவர் ஜெயராமன்.

Dr.S.Jayaraman Senior Consultant Pulmonologist

”நுரையீரல் புற்றுநோய் என்பது பரவலாக காணப்படும் புற்றுநோய்களில் ஒன்றாகும். சுவாசப்பாதையான மூச்சுக்குழலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படுகிற புற்றுநோயானது நுரையீரல் புற்றுநோய் என்றழைக்கப்படுகிறது.”

அறிகுறிகள்:

புற்றுநோய் தாக்கிய 3 ல் 1வருக்குதான் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும். அதாவது இருமல், சளியில் ரத்தம், நெஞ்சுவலி, இளைப்பு போன்றவை ஏற்படும். 3 ல் 1 பங்கு பேருக்கு அதீதா அறிகுறிகளான நுரையீரலில் கட்டிகள் உருவாகி அந்த கட்டியானது மூளைக்கு செல்லும் போது வலிப்பு போன்றவையும், எலும்புகளுக்கு செல்லும்போது எலும்பு வலியும், கல்லீரலில் கட்டிகள் பரவும் போது மஞ்சள்காமாலை போன்றவையும் ஏற்படும்.

மற்ற 3 ல் ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் புற்றுநோயின் தாக்கம் என்பது ஏற்படும். இவ்வகையானவர்களுக்கு ஸ்கேன் போன்றவை செய்து பார்க்கும்போது, நுரையீரலில் கட்டிகள் இருப்பது தென்படும்போது, அதனை பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலம் இவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா என்று அறிந்து கொள்ளலாம்.

எப்படி தற்காத்து கொள்ள வேண்டும்.

  • சுற்றுப்புறத்தை தூய்மையாக பார்த்து கொள்ள வேண்டும்.

  • முழு உடல் பரிசோதனை ஆண்டுதோறும் செய்து கொள்ள வேண்டும்.

  • புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • நல்ல உணவுகள், உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகிறது. இது போன்று பல்வேறு தற்காத்து கொள்ளும் முறைகள் உள்ளது.

முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது புகையிலை பழக்கம். இதில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட நச்சுப்பொருள்கள் இவற்றில் உள்ளது. அதிலும் , 250 க்கும் மேற்பட்ட பொருட்கள் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களான குரோமியம். நிக்கல், கேட்மியம், அலுமினியம், கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு,பீனால், இது போன்ற கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளது.

குறிப்பாக, நிக்கோட்டின் இது அடிமைத்தனத்தை உருவாக்கும் பொருள். மேலும், மீதம் ஒரு 60% சுற்றுப்புற காசு மாற்று,அனு உலைகளில் பணிப்புரிபவர்களுக்கு இவ்வகையான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இரண்டு வகையான பாதிப்பு

புகைப்பழக்கத்தை பொறுத்தவரை, இரண்டு வகையான பாதிப்பு உள்ளது.

active smoking: (நேரடியான புகைப்பழக்கம்)

நேரடியாக ஒருவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது, நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

passive smoking

புகைப்பிடிப்பவர் புகையை இழுத்து வெளியிடும்போது, வெளியே வரும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசிக்கும்போது இதனால் ஏற்படும் பாதிப்பை passive smoking என்று குறிப்பிடுகிறோம். இதில், புகைப்பிடிக்கமாலே, அருகில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், COPD போன்ற பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

புகைப்பிடிப்பதை உடனே நிறுத்தினால் ஆபத்தா?

ஆகவே, புகைப்பிடிப்பதிலிருந்து மீண்டு வர வேண்டும். புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், சிலருக்கு Nicotine Withdrawal Symptoms என்பது இருக்கும். இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மருந்துகள் மூலமாக கட்டுப்படுத்தலாம்.

அதாவது 100 ல் 10 க்கு இதன் பாதிப்பு உள்ளது என்றால், அதில் 5 பேருக்கு மட்டும்தான் இவ்வகையான மருந்துகள் தேவைப்படும். மற்றவர்களுக்கு இந்த வகையான எந்த தொந்தரவும் இருக்காது. ஆகவே, புகைப்பிடிப்பதை படிப்படியாக நிறுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. உடனடியாகவே நிறுத்தலாம்.

மேலும், அணு உலை போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் low dose ct scan பரிசோதனை செய்து இவ்வகையான பாதிப்புகள் ஏற்படுகிறதா என்று சோதிக்க வேண்டும். முழு உடல் பரிசோதனையும் மிக மிக முக்கியம்.

மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள மாசுக்களும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பெரும் காரணமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, இது போன்ற விழிப்புணர்வுகள் மூலம் நுரையீரல் புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை படைத்திட ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியை உலக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக உலக சுகாதார தினம் அறிவுறுத்தியுள்ளது” என்று மருத்துவர் விளக்கினார்.

சட்ட நடவடிக்கை என்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புகையிலை சார்ந்த பழக்கங்களால் உயிரிழக்கிறார்கள். இதில் சுமார் எழுபது லட்சம் பேர் நேரடி புகையிலை பயன்பாட்டினால் இறக்கிறார்கள், அதே சமயம் புகைப்பிடிக்காதவர்கள் 10 முதல் 13 லட்சம் பேர் தன்முனைப்பற்ற புகைத்தல் காரணமாக இறக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் பெண்கள்.

2014ஆம் ஆண்டில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு சிகரெட் பாக்கெட்டுகளில், 'புகைப்பிடிப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்' என்ற எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், சிகரெட் தயாரிப்பாளர்கள் அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அரசின் முடிவை உறுதி செய்தது.

இப்படி பல இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் வகையில், குட்கா, புகையிலை என பலப்பொருள்களுக்கு தடை என்று பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இருப்பினும் தானாக இதை கைவிடும் வரை மாற்றம் எதுவும் ஏற்பட போவதில்லை.

குறிப்பு: மேற்கூரிய மருத்துவர் அளித்த தகவலின் படி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே புகைப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனால், பாதிக்கப்படுவது இவர்கள் மட்டுமில்லை, புகைப்பிடிக்காமல் அருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவரும்தான்... இந்த எண்ணம் ஏன் புகைப்பிடிப்பவர்களுக்கு வரவில்லை?

பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்று தெரிந்தும் கூட அதை ஸ்டைல் என்ற பெயரில் செய்யும் சிலருக்குக்காக இந்த கருத்துக்கள்... நீங்கள் புகைப்பிடிப்பது உங்களையும் மட்டுமல்ல, நீங்கள் அன்பை பொழியும் உங்கள் குடும்ப உறுப்ப்பினர்கள், நண்பர்கள் ஒவ்வொருவரையும்தான் பாதிக்கிறது. இதை நீங்கள் ஒரு முறை யோசித்து இருந்தால் எப்பொழுதுதோ அந்த காகிதங்கள் வெற்று காகிதங்களாக வீசி எரிந்திரிப்பீர்கள்!.... உங்கள் நலம் சமுதாயத்தின் நலம் என்பதை மறக்க வேண்டாம்.