Heat wave Twitter
ஹெல்த்

Heat Stroke என்பது என்ன? ஏற்படுவதற்கான காரணம் என்ன? யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது?

Angeshwar G

உலக வெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மனிதர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Heat stroke

ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாதம் என்பது ஒரு அவசர மருத்துவ நிலையாகும். பொதுவாக இந்நிலையின்போது உடலின் வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும். அதீத வெயிலில் ஒருவர் இருக்கும்போது, உடல் சாதாரண வெப்ப நிலையை தானாகவே கையாள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், வெப்ப வாதத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகரும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவருமான வி.பி. சந்திரசேகரன் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது விளக்கம் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களாக அமைந்துள்ளது.

Heat stroke என்றால் என்ன?

ஹீட் ஸ்ட்ரோக் என்பது, வெப்பகரமான நாட்களில் அதிகநேரம் சூரியனின் நேரடித் தாக்கத்தில் இருக்கும்போதோ அல்லது வீட்டிலே கூட காற்று இல்லாமல் சூடான இடத்தில் இருந்தாலோ நமக்கு பக்கவாதம், மயக்கம், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூட வாய்ப்புள்ளது. இதைத்தான் வெக்கைவாதம் என சொல்வார்கள்.

யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது?

இது யார்யாருக்கெல்லாம் வரும் என சொன்னால் வயதில் முதிர்ந்தவர்களுக்கு அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக நமக்கு வியர்வை சுரக்கும், அதன் காரணமாக உடலின் வெப்பநிலை குறைந்து சமநிலைப்படுத்திக்கொள்ளும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வயதானவர்களுக்கு இந்த சமநிலைப்படுத்தும் தன்மை குறைந்திருக்கும். இதனால் அவர்களுக்கு சரியாக வேர்க்காது. உடல்சூடு அதிகமாகிவிடும். உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் சூழல் உருவாகும். இதுமட்டுமின்றி அவர்களுக்கு உறுப்புகளும் பாதிக்கப்பட்டிருக்கும், இதனாலும் சமநிலை பேணும் தன்மையும் குறைந்துபோகும்.

Heat stroke ஏற்பட காரணம் என்ன?

இதைத் தாண்டி வயதுமூப்பின் காரணமாக உட்கொள்ளும் சில மருந்துகள் கூட வேர்வை வராமலே வைத்திருக்கும். இதனால் என்னவாகும் எனில் உடல் சூடு அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். எனவே வயது முதிர்ந்தவர்கள், மனநோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், மன அழுத்தத்திற்கு எதிராக மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் வெயிலில் வேலை செய்வதையோ, வெயிலில் சுற்றுவதையோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வருமா என்றால், அப்படி அல்ல? வயது முதிர்ந்தவர்களுக்கு அதிகமாக வந்தால், வயது குறைந்தவர்களுக்கு குறைவாக வரும்.

உணவு முறைகள் என்னென்ன பின்பற்ற வேண்டும்?

நாம் அணியும் துணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்., காற்றோட்டம் வரும் துணியாக வெண்மையான துணியாக இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் இருங்கள். திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீர், இளநீர், பழச்சாறுகளை அருந்துங்கள்.

வெளியில் சென்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட ஒருத்தரை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். தலைவலி, மயக்கம் என ஏற்பட்டால் முதலில் நிழலிற்குச் செல்லுங்கள். உடன் வந்தவர் மயக்கம் அடைந்துவிட்டால் அவரை நிழலுக்கு கொண்டு வந்து அவர் மேல் தண்ணீர் தெளியுங்கள்” என்றார்..