சமந்தா  புதிய தலைமுறை
ஹெல்த்

சர்ச்சை போஸ்ட் | “பொது சுகாதார விஷயத்தில் சமந்தா ஒரு Serial Offender” - கொந்தளித்த மருத்துவர்!

ஜெ.நிவேதா

சமந்தா தன்னுடைய கடந்த வார பாட்காஸ்டில், தனக்கு உள்ள தசை நார் அழற்சி குறித்தும், அதற்கு தான் மேற்கொள்ளும் ‘மாற்று மருத்துவ முறை’ குறித்தும் சில தகவல்களை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘Hydrogen peroxide nebulisation’ என்றொரு விஷயத்தை அவர் கூறியிருந்தார். அதில் ‘நெபுலைசர்’ எனப்படும் ஒருவகை கருவியை மூக்கில் வைத்தபடி சமந்தா ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

சமந்தா இன்ஸ்டா ஸ்டோரி

அதில் கேப்ஷனாக, “பொதுவான வைரல் மருந்தை ஒருவர் எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயன்று பாருங்கள். அப்படியான ஒரு வழிதான், ஹைட்ரஜன் பெராக்ஸைட் மற்றும் காய்ச்சிய வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவரின் கடுமையான விமர்சனம்....

இதற்கு மருத்துவர்கள் சிலரேவும் கடுமையான சில எதிர்வினைகளை தெரிவித்திருந்தனர். அதன்படி எக்ஸ் தளத்தில் ‘The Liver Doc’ என்பவர் நேற்று கூறியிருந்த சில தகவல்கள் அதிக கவனம் பெற்றன.

இந்த The Liver Doc என்பவரின் உண்மையான பெயர், சிரியக் அபி ஃபிளிப்ஸ் (Cyriac Abby Philips) கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஆவார். அவர் தன் எக்ஸ் தளப் பதிவில், “அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம், hydrogen peroxide nebulisation பயன்படுத்த வேண்டாம் என்கிறது. ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இவருக்கு (சமந்தாவுக்கு) அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும். அவருக்கு உதவியோ அட்வைஸரோ தேவைப்படுகிறது. இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு இதுபோன்ற பிரபலங்கள் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பது குறித்து ஏதேனும் செய்வார்களா? அல்லது முதுகெலும்பில்லாமல் மக்களை இறக்க விடுவார்களா?” என்று மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

இன்ஸ்டாவில் சமந்தா எதிர்வினை...

இந்நிலையில், இதற்கு நடிகை சமந்தா தனது இன்ஸ்டா மூலம் இன்றைய தினம் விளக்கமொன்று கொடுத்துள்ளார். அதில், “கடந்த 2 ஆண்டுகளாக, நான் பல வகையான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறேன். எல்லாமே ‘நிச்சயம் நீங்கள் எடுக்க வேண்டியவை’ என எனக்கு பரிந்துரைக்கப்பட்டவை மட்டுமே. தகுதிபெற்ற நிபுணர்களால், பலகட்ட ஆராய்ச்சிக்குப் பிறகே எனக்கு அனைத்தும் பரிந்துரைக்கப்பட்டன.

சமந்தா

அதிலும் சில சிகிச்சைகள், அதீத செலவு கொண்டவை. நான் எப்போதுமே பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் நிலையை யோசித்து, என்னுடைய செலவுகளை செய்யும் நபர். ஆகவே பல கட்ட ஆலோசனைக்குப் பின்னர், பலமுறை யோசித்து நான் எடுத்த முடிவுதான் மாற்று முறை மருத்துவம் என்பது. எனக்கு அவை முழுமையாகவும் ஆச்சர்யமளிக்கும் வகையிலும் பயனளித்தன.

நான் எப்போதுமே சிகிச்சையில் மிக மிக கவனமாக இருப்பேன். அப்படி எனக்கு நல்ல பலன் அளித்த சிகிச்சை பற்றி சமீபத்தில் நான் பகிர்ந்திருந்தேன். எனக்கு அவற்றை பரிந்துரைத்தது நன்கு படித்த அங்கீகாரம் பெற்ற மருத்துவர்தான். 25 வருடங்களாக அவர் மருத்துவ சேவையில் இருக்கிறார். அவர்தான் என்னை மாற்று மருத்துவத்தை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தினார்.

சமந்தா

ஆனால் என்னுடைய பதிவுக்கு, மருத்துவரென்ற பெயரில் கடுமையான வார்த்தைகளோடு ஒரு நபர் பதிலொன்று தந்திருந்தார். அந்நபருக்கு, என்னைவிட என்னைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் என்னை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய நோக்கம் நல்லதாகவே தெரிகிறது. ஆனால் வார்த்தைகளில் அவர் சற்று பொறுமையையும் கனிவையும் கடைபிடித்திருக்கலாம். குறிப்பாக, ‘நான் சிறையில் தள்ளப்படவேண்டியவள்’ என அவர் கூறியது. நானொரு செலிபிரிட்டி என்பதால் இப்படி நடக்கலாம்... ஆகவே நான் அதை கண்டுகொள்ள விரும்பவில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் செய்ததெல்லாம், நான் சுயமாக எடுத்துப்பார்த்து, எனக்கு பலனளித்த ஒரு மருத்துவத்தை, இன்னொருவருக்கு பரிந்துரை செய்தது மட்டுமே. செலிபிரிட்டியாக இல்லாதபோதும் சிலருக்கு ட்ரீட்மெண்ட் தேவைப்படலாம் அல்லவா... சிலருக்கு இன்றுள்ள மருத்துவம் வேலை செய்யாமல் போகலாம் அல்லவா... அவர்கள் வேறு வழியை தேடலாம்... அதுவும் சற்று குறைந்த விலையில். அப்படியானவர்களுக்காகவே நான் அந்தப் பதிவை இட்டேன். மற்றபடி இதன்மூலம் நான் பணம் எதுவும் பெறவில்லை. யாரையும் இதை பயன்படுத்த சொல்லி வலியுறுத்தவும் இல்லை.

சமந்தா

சம்பந்தப்பட்ட அந்த ‘மருத்துவர்’, என் மருத்துவரையே அழைத்து ‘ஏன் அந்த மருத்துவ முறையை பரிந்துரை செய்திருந்தீர்கள்’ என கேட்டிருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும். அப்படி இரு தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்கள் விவாதிப்பதையும், விவரிப்பதையும் பார்க்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்.

மற்றபடி, என் உடல்நலன் மேம்பட எனக்கு உதவிய மருத்துவ முறைகள் பற்றி நான் பகிரும் ஒவ்வொரு தகவலும், மற்றவர்களுக்கும் அது பயன்படும் என்பதற்காகத்தான். யாரையும் புண்படுத்த அல்ல. எத்தனையோ பெரிய மனிதர்களேவும்கூட ஆயுர்வேதா, ஹோமியோபதி, அக்குபஞ்சர், திபத்திய மருத்துவ முறை, ஆரா போன்ற முறைகளை பரிந்துரை செய்து கேட்டுள்ளேன். அப்படியான ஒன்றையே நானும் செய்திருக்கிறேன். எனக்கு பயன் தந்த ஒரு விஷயத்தை, நான் பகிர்ந்தேன், அதுவும் ஆப்ஷனாக.

நம்மில் பலரும் உடல் உபாதைகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீள ஏதாவதொரு வழி கிடைக்காதா என தேடி வருகிறோம். அப்படியிருக்கும்போது, தகுதிவாய்ந்த நபர்கள் தரும் ஒவ்வொரு ஆலோசனையும் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எதிரான கருத்துகள் இருந்தால், அதுவும் சொல்லப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அனைத்தையும் உணர்ந்தே நாம் செயல்படுகிறோம்” என்றுள்ளார்.

சமந்தாவின் பதிவிற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்திருக்கும் அந்த கல்லீரல் சிறப்பு மருத்துவர், “மாற்று மருத்துவத்தை மீண்டும் ஒருமுறை சமந்தா வழிமொழிகிறார். இங்கே ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். மருத்துவம் தொடர்பான தவறான தகவல்களை தொடர்ந்து அளிப்பவர் என்ற முறையில், சமந்தா ஒரு தொடர் குற்றவாளி.

என்னைப் போன்ற மருத்துவர்கள், எங்களின் பிஸியான நேரத்திலும் ஏன் இதற்கெல்லாம் பதிலளிக்கிறோம் என்றால், பொதுசுகாதாரம் பற்றி எந்த அறிவுமில்லாத இன்ஃப்ளூயென்ஸ் அதிகமுள்ள ‘செலிபிரிட்டி’களால் தவறான தகவல் ஆன்லைனில் பரவக்கூடாது என்பதற்காகத்தான்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்ப்பரவுதல் தடுப்பு ஆகியவையே என் நோக்கம். அதற்காக நான் (நாங்கள்) கோபமாகவும், கடுமையாகவும் உண்மைகளோடு சில விஷயங்களுக்கு விமர்சிப்போம். எங்களால் எமோஷனுடன் எதையும் டீல் செய்து நேரத்தை விரயம் செய்ய முடியாது.

இந்த நாட்டில் அறிவியல் மனோபாவம் அல்லது பகுத்தறிவு வாதத்தை மேம்படுத்த முடியும் என்பதில் எனக்கு கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. ஒவ்வொருவரும் ‘அறிவியல் ரீதியான விமர்சனம்’ என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, சோதிக்கப்படாத அல்லது சுய பிரதிபலிப்பு இல்லாத ஆபத்தான சிகிச்சைகளின் மீது பிடிவாதமான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

சமந்தா
என்னுடைய பதிவிற்கு பகுத்தறிவான மற்றும் தர்க்கரீதியான பதில் என்பது, பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அந்த பதிவை சமந்தா நீக்குவதும், அப்பதிவிற்காக அவரது மில்லியன் கணக்கான ஃபாலோயர்களிடம் அவர் மன்னிப்பு கேட்பதும்தான்.

மேலும் இனிவரும் காலத்திலும் மோசடியான இப்படியான விஷயங்களையும் அதன் பயிற்சியாளர்களையும் மேற்கோள்காட்ட மாட்டேன் என உறுதியளித்து செயல்படுவதுதான்.

இன்ஃப்ளுயென்ஸ் இருப்பவர்கள், உண்மையில் மக்களிடம் நேர்மறையாக செல்ல விரும்பினால், கற்றலைத் தொடங்குங்கள். மீண்டும் மீண்டும் கற்றுக் கொள்ளுங்கள். விமர்சன மற்றும் சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். ‘பாதிக்கப்பட்டவர் நான்’ எனக்கூறி அந்தப் போர்வையில் நிற்காமல், உங்களுக்கு உதவும் அறிவியலையே தவறாக காட்டாதீர்கள். அறிவியலுக்காக துணை நில்லுங்கள்.

அப்போதுதான் வருங்காலம் சரியாக அமையும். இனிவரும் காலத்தில், சமந்தாவின் எந்த போலி அறிவியல் பதிவிற்கும் நான் எதிர்வினை ஆற்றமாட்டேன். ஏனெனில், போலி அறிவியல் மாற்று பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இடுகைகளுக்கு சமந்தாவின் எதிர்கால ஒப்புதல்கள் எதற்கும் நான் கருத்து தெரிவிக்கவோ அல்லது மறுக்கவோ மாட்டேன், ஏனெனில், உதவி தேவைப்படாதவர்களுக்கு, நீங்கள் உதவ முடியாது” என்றுள்ளார்.

இதையடுத்து இவ்விவகாரம் மேலும் மேலும் பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.