Actress Saranya pt desk
ஹெல்த்

உலக தாய்ப்பால் வாரம் | “குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது” – நடிகை சரண்யா

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நடிகை சரண்யா பொன்வண்ணன் கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தனக்கு ஏற்பட்ட மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்த்தாகவும், அதனால் தன் இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் மருத்துவர்களாக உள்ளனர் என்றும் கூறினார்.

உலக தாய்ப்பால் வாரம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரண்யா, "உலக தாய்ப்பால் வாரத்தை கொண்டாடும் நிகழ்வுக்காக என்னை அழைத்தது பெருமையாக உள்ளது. தாய்மார்கள் அனைவருக்கும் தாய்ப்பாலில் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இடையில் குறைந்திருந்தாலும் தற்போது அது அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. எல்லோருக்கும் அதனுடைய அருமை தெரிந்துள்ளது.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சி அடைகிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தாய்ப்பால் உருவாகிறது. அதனை தவறாமல் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் உண்மையே இல்லை. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு கூடும், குழந்தைகளின் அழகும் கூடும். குழந்தைகளின் அழகு கூடுவதை பார்த்து தாய்மார்கள் இன்னும் அழகாக மாறிவிடுவீர்கள்.

Actress Saranya

பெரும்பாலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுதான். எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோய் எனும் கொடுமையான நோயிலிருந்தும் தப்பிக்க முடியும்” என்று கூறினார்.