சிறப்புக் களம்

வ.உ.சி-ன் மகத்தான சாதனை : இன்று வரலாற்றில் முக்கியமான நாள் ஏன் தெரியுமா?

webteam

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் 16.10.1799. அந்த நாளை நினைவுபடுத்தி 108 ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ. சிதம்பரானார் சுதேசி நாவாய் சங்கம் கண்ட நாள் 16.10.1906. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான நாள் இன்று.

சுதேசி நாவாய் சங்கம் கண்ட 115 வது ஆண்டு இது. கப்பலில் வணிகம் செய்யவந்த பிரிட்டிஷ்காரர்களை அதே கப்பல் கம்பெனியை ஆரம்பித்து மூட்டை முடிச்சோடு அனுப்புவதற்கு முள்ளை முள்ளால் எடுக்க அடையாளப்படுத்திய வித்தியாசமான முதல் அறப் போராட்டம்.

"காங்கிரஸ் வரலாற்றில் வஉசியின் கப்பல் கட்டிய போராட்டம் குறித்து தேடினால் ஒரு வரிகூட பார்க்கமுடியாது. இந்தப் போராட்ட வடிவை எடுத்த காரணத்திற்காக இந்தியாவில் மறக்கமுடியாத மிகச் சிறந்த மூன்று நாயகர்கள் வரிசையில் மாலிக் ஆம்பர், தாராஷுகோ அடுத்ததாக பெரியவர் வ.உ.சி.யை தேர்ந்தெடுத்துள்ளது மார்செலஸ் முதலீட்டு மேலாண்மை நிறுவனம்" என்கிறார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.

இந்தியாவின் மறக்கமுடியாத மிகச்சிறந்த மேலாண்மை நாயகர்களாக மொகலாய ஆட்சியின் மாலிக் ஆம்பர் (1548-1626),
ஷாஜகான் மூத்த மகன் தாராஷூகோ (1615 - 1659) அடுத்ததாக வ.உ.சிதம்பரனார் (1872 -1936) மூவரையும் நிர்வாக மேலாண்மை நாயகர்கள் என மார்செலஸ் நிர்வாக மேலாண்மை இதழ் பாராட்டியுள்ளது.

"மகாத்மா காந்தி முழுமையாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, காங்கிரஸ் சுதேசி இயக்கத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பு, 1906 ஆம் ஆண்டில் மறக்கமுடியாத பாணியில் சுதேசி இயக்கத்தை வஉசி முன்னெடுத்துள்ளார். தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியில் இருந்த அவர் பாலகங்காதர திலகரை அரசியல் வழிகாட்டியாகப் பின்பற்றியுள்ளார். பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிகள் கோலோச்சிக்கொண்டிருந்த தூத்துக்குடி துறைமுகத்தில் சுதேசி நாவாய் சங்கத்தை அவர் தொடங்கினார்" என்று மார்செலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://marcellus.in/blog/