சிறப்புக் களம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கசுவோ இஷிகுரோ

webteam

இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட கசுவோ இஷிகுரோவின் நாவல்கள் மிகச்சிறந்த மனித உணர்வுகளின் பிம்பங்களாக உள்ளன என்று நோபல் பரிசுக்குழு புகழ்ந்துள்ளது.

கசுவோ இசிகுரோவுக்கு 2017 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இஷிகுரோ, 1954 ஆம் ஆண்டு ஜப்பானின் நாகசாகி நகரில் பிறந்தவர். 1960 ஆம் ஆண்டு இவருக்கு 5 வயதாக இருந்த போது, இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. இவர் தனது இளங்கலை படிப்பை கெண்ட் பல்கலைக்கழகத்திலும், முதுகலை படிப்பை கிழக்கு ஏஞ்சலியாஸ் பல்கலைக் கழகத்திலும் முடித்தார்.

இஷிகுரோ சமகால ஆங்கில கற்பனை கதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர். ஆங்கில நாவல் உலகில் மிக முக்கியமானவர். இதுவரை 8 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரின் புத்தகங்கள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புக்கர் விருதுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டவர். கசுவோ எழுதிய ’தி ரிமெயின்ஸ் ஆஃப் தி டே’ (The remains of the day) என்ற நாவலுக்காக புக்கர் விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் ஆங்கில நாளிதழ் தி டைம்ஸ்-ன் தலைசிறந்த 50 பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பட்டியலில் 32 ஆவது இடத்தை பிடித்தவர் இஷிகுரோ.

கசுவோவின் நாவல்கள்:

1. எ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ் (The pale view of hills)

2. ஆன் ஆர்ட்டிஸ்ட் ஆஃப் தி ஃளோட்டிங் வேர்ல்ட் (Am artist of the floating world) - 1986

3. தி ரிமெயின்ஸ் ஆஃப் தி டே (The Remains of the day)

4. தி அன்கன்சோல்டு (The unconsoled) - 1990

5. வென் வி வேர் ஆர்ஃபன்ஸ் (when we were orphans) - 2000

6. நெவர் லெட் மி கோ (Never let me go)- 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல், 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படமாக எடுக்கப்பட்டது.

7. நாக்டெர்ன்ஸ்: ஃபைவ் ஸ்டோரிஸ் ஆஃப் (Nocturnes: Five Stories of Music and Nightfall) - 2009

8. தி பரீட் ஜயண்ட் (The buried giant)

தி வொயிட் காட்டஸ் (The white goddes), தி சேடஸ்ட் மியூசிக் இன் த வேர்ல்ட் (The Saddest Music in the World) போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார் கசுவோ.

கசுவோவின் நாவல்கள் மிகச்சிறந்த மனித உணர்வுகளின் பிம்பங்களாக உள்ளன. அவரின் எழுத்துக்கள் நாம் வாழும் உலகத்துடனான தொடர்பை, மனித கற்பனை உணர்வுகளின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படுத்துவதாக உள்ளன என்று நோபல் பரிசுக்குழு பெருமைப்படுத்தியது.

நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து கசுவோ, எனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட செய்தி, அற்புதமான, எதிர்பாராத ஒன்று என்று கூறினார்.