சிறப்புக் களம்

உங்கள் குழந்தைகள் சிவப்பாகப் பிறக்க வேண்டுமா? திட்டம் வைத்திருக்கிறது ஆர்எஸ்எஸ்

Rasus

மகாபாரதத்தில் அபிமன்யூ சக்ராவியூகத்தை உடைப்பது எப்படி என்று தான் அம்மாவின் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டார் என்று ஒரு கதையுண்டு. அதே போல, இப்போது பிறக்கும் குழந்தைகளும் கருவில் இருக்கும் போதே சிவப்பாகவும், உயரமாகவும், அறிவுத் திறனுடனும் உருவாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாக கூறியுள்ளது. இதற்காக குழந்தைகளை கருத்தரிக்கும் முன்னர் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? பிறந்த பிறகு செய்ய வேண்டியது என்ன? என்றும் செய்யக் கூடாதவை என்ன என்றும் ஒரு பெரிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருக்கிறது ஆர்எஸ்எஸ்.

ஆர்.எஸ்.எஸின் சுகாதாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்திற்கு ‘கார்ப் விஞ்ஞான் சான்ஸ்கர்’ என்று பெயர் வைத்துள்ளது. ஆங்கிலத்தில் இதை யூட்ரஸ் சயின்ஸ் கல்ச்சர் என்று பெயர். இந்த திட்டத்தை முதன் முதலாக குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஆர்எஸ்எஸ். தற்போது மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தம்பதிகள்தான் சேர வேண்டும் என்பதில்லை. திருமண வயதில் உள்ள பெண்களும் சேரலாமாம். ஆயுர்வேத முறை மூலம் பெற்றோர்களின் குறைபாடுள்ள மரபணுக்கள் குழந்தைகளுக்கு செல்லாமல் தடுத்து, தாங்கள் நினைக்குமாறு குழந்தை பெற முடியும் என்று கூறுகிறார்கள் இந்த அமைப்பில் உள்ளவர்கள். திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு மூன்று மாத ‘சுத்திகரிப்பு’ செயல்முறையும் உள்ளதாம். இந்த மூன்று மாதங்களில் தம்பதிகளின் ஆற்றல் தடங்கள் மற்றும் உடல் சுத்திகரிக்கப்படுமாம். இதனால் பெண்ணின் கருமுட்டையும் ஆண்ணின் விந்தும் சுத்தமாகுமாம். இதன் பிறகு உடலும் சுத்திகரிக்கப்படும். சுத்திகரிப்புக்கு செயல்முறைக்குப் பிறகு குறிப்பிட்ட நேரத்தில்தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் உண்டு. அந்தப் பெண் கருவுற்ற பிறகு, எந்த மாதத்தில் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்ல. என்னென்ன மந்திரங்களைக் காதால் கேட்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த முறையைப் பின்பற்றிப் பிறக்கும் குழந்தைகள் ‘சூப்பர் பேபியாக’இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 6000 கோடி மதிப்பிலான அழகு சாதன பொருட்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் என்கிறார்கள். வெள்ளையர்களும் இந்தியர்களைப் பார்த்து கருப்பாக இருப்பதாக ஏளனம் செய்ய மாட்டார்கள் என்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜெர்மனியில் இந்த முறை சிறந்த குழந்தைகளை பெற்றெடுக்க உதவியதாகவும் கூறுகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர்கள். 2020-ம் ஆண்டுக்குள் இது போன்ற பல்லாயிரக்கணக்கான சிறந்த குழந்தைகளை பெற்றெடுக்க உதவ வேண்டும், எல்லா மாநிலங்களிலும் ‘கார்ப் விஞ்ஞான் சான்ஸ்கர்’ மையங்கள் திறக்க வேண்டும் என்பதே இவர்களது இலக்காம்.