சிறப்புக் களம்

கொரோனா பக்கவிளைவுகள் டூ பூஞ்சைத் தொற்று பாதிப்பு - மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் நேர்காணல்

கொரோனா பக்கவிளைவுகள் டூ பூஞ்சைத் தொற்று பாதிப்பு - மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் நேர்காணல்

நிவேதா ஜெகராஜா

கொரோனா இரண்டாவது அலையில் நமக்கு எழும் அடிப்படையான சில சந்தேகங்களுக்கு, தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் பகிர்ந்தவற்றிலிருந்து...

“கொரோனா இரண்டாவது அலையில், இணை நோயாளிகள் இல்லாதவர்களின் மரணமும் அதிகமாக இருக்கிறது. ஏன்?”

“மரணங்கள் அதிகரிக்க சரியான காரணம் எதுவென இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதுபற்றிய ஆய்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முடிவில்தான் காரணம் தெரியவரும். இப்போதைக்கு, முதல் அலையை விடவும், இந்த அலை கொரோனாவின் வீரியம் அதிகமாக இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இந்த அலையில் 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நோய் தீவிரமாக பரவியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாள்களாக இவர்களில் பலரும் பொதுவெளியில், கூட்டமான இடங்களில் அதிகளவில் புழங்கினர். கடந்த அலையில், பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், வெளியில் சென்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த அலையில் அந்த நிலை இல்லை.

இந்தக் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இளைஞர்கள், கர்ப்பிணிகள் மத்தியில் குறைவாக இருக்கிறது என்பது போன்ற தரவுகளும் இருக்கின்றன. கள நிலவரமும் அதைத்தான் உணர்த்துகின்றன.

இவர்கள் மட்டுமன்றி, குழந்தைகளுக்கும் பாதிப்பு அதிகம் உறுதிசெய்யப்படுகிறது. 3-வது அலையில்தான் குழந்தைகளுக்கு கொரோனா அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட நிலையில், 2-வது அலையிலேயே அவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பது, குழந்தைகள் இயல்புக்கு திரும்புவதாக நினைத்து பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதுதான்.

இந்த நோயின் அடிப்படை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இது பரவும் என்பதுதான். ஆகவே இப்போதைக்கு அனைத்து தரப்பினரும் கூடுதல் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த அலையில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டாலும், இது தீவிரமாக அவர்களை இப்போதைக்கு பாதிக்கவில்லை. ஆனால் அடுத்த அலையில் அவர்களுக்கு தீவிரமாக பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்படுவதால், அவர்களை இப்போதிருந்தே நாம் காக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அவர்களை நெருங்காதளவுக்கு பெரியவர்கள் நடந்துக் கொள்ள வேண்டும்.”

“மாறிக்கொண்டிருக்கும் கொரோனா திரிபுகளையும் நடைமுறையில் இருக்கும் தடுப்பூசிகள் தடுக்குமா?”

“வைரஸ் என்பது எப்போதுமே திரிபு மாற்றத்துக்கு உட்பட்டதுதான். இப்போதிருக்கும் தடுப்பூசி, அனைத்து திரிபுக்கும் எதிராக செயல்படும் என சொல்லமுடியாது. ஆகவே அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் தடுப்பூசிகளும் வந்துக்கொண்டுதான் இருக்கும். வேறு வழியே இல்லை, நாம் அவற்றை எடுத்துக்கொண்டு நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமே தீர்வு.

இரண்டு டோஸ் போட்டிருப்பவர்களும் கூட, ஆறு மாதத்துக்கு பிறகு பூஸ்டர் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.”

“தொற்றை கண்டறிந்தவுடன் மருத்துவமனையில் நோயாளியை அனுமதிக்க வேண்டுமா?”

“இல்லை. தொற்றை கணித்தவுடன், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் மருந்துகளை மருத்துவர் அறிவுரையுடன் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு உடலில் குறையாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இதில், ஆக்சிஜன் அளவு குறைவதை தடுக்க உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அடுத்தபடியாக, துண்டில் ஐஸ்கட்டியை வைத்து அதை அக்குள் பகுதி, காலுக்கு கீழ் வைக்கலாம். இதற்கும் அடுத்து, இருமலுக்கான மருந்து எடுத்துக்கொள்வது. இவற்றோடு சேர்த்து, அவ்வபோது வாக்கிங். இவை அனைத்தையும் செய்தால், ஆக்சிஜன் அளவு சீராகும்.

ஒருவேளை இவை அனைத்தையும் செய்தபின்னரும்கூட, ஆக்சிஜன் 95-க்கு குறைவாக தெரிந்தால், பதற்றமடையாமல் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து மீண்டுமொரு முறை பரிசோதிக்க வேண்டும். பின் மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக பலமுறை இப்படி ஏற்பட்டால், மருத்துவமனையை அனுகுங்கள்.”

“கொரோனாவுக்கான பக்கவிளைவுகள் என்ன? அதற்கான சிகிச்சைகளும் தனியாக எடுக்கவேண்டுமா?”

“கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு, கொரோனாவுக்கான அறிகுறிகள் நீளலாம். அவற்றில் முக்கியமாக வாயில் அசௌகரியம் இருப்பது – தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் – பசியின்மை – மூட்டுகளில் வலி – நெஞ்சுப் பகுதியில் பிடிப்பு – உடல் சோர்வு – தொடர் இருமல் – நடந்தால் கூட மூச்சுத்திணறல் வருவது – பேனிக் அட்டாக் எனப்படும் இனம்தெரியாத பயம் சில நொடிகளில் ஏற்படுவது போன்றவை இருக்கிறது. இவை அனைத்துக்குமே, மருத்துவர்கள் ஆலோசனையும் சிகிச்சைகளும் தருவர். இது எதுவுமே பயப்படும்படியான பாதிப்பு இல்லையென்பதால், மனதளவிலான பயத்தை தவிர்த்திடுங்கள்.

இப்படியானவர்களுக்கு, தங்களுக்கு மீண்டும் கொரோனா வந்துவிட்டதோ  என்ற அச்சம் வருவதை காணமுடிகிறது. லேசான – மிதமான பாதித்த நபர்களுக்கு, அதிகபட்சம் 10 நாள்களுக்கு மேல் கொரோனா உடலில் இருப்பதில்லை. மிகத் தீவிரமாக கொரோனா ஏற்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களுக்குக் கூட, 20 நாள்களுக்கு மேல் கொரோனா இருப்பதில்லை. அவர்களுக்கு ஏற்படுவதெல்லாம் பக்கவிளைவுகள்தான். அவற்றுக்கு சிகிச்சை எடுத்தால், நிச்சயம் இயல்புக்கு திரும்பலாம்.”

“கருப்பு பூஞ்சை தொற்று எதனால் ஏற்படுகிறது? இதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?”

“இது இரண்டு விதமான காரணங்களால் ஏற்படலாம். ஒன்று, கொரோனா சிகிச்சையின் தரப்படும் ஸ்டீராய்டு – டோசிலிசுமாப் – பாரிசிட்டிலின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் பக்கவிளைவுகள் கொண்ட மருந்துகள் தரப்படும்போது இந்த வைரஸ் உடலில் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும்.

மற்றொரு விதம், முகார் என்ற காற்றில் உலாவரும் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்பு. இந்த பூஞ்சை, அழுகிய உணவுகள், காய்கறிகளில் உருவாகும். அதிலிருந்து காற்றில் பரவும். காற்றிலிருந்து, சுவாசம் வழியாக மூக்கின் திசுக்கள் - குறிப்பாக சைனஸ் திசுக்களை பாதித்து, உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியமான நபர்களுக்கு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக பாதிப்பு ஏற்படாது.

இவை மட்டுமன்றி, கொரோனா சிகிச்சையின்போது தரமற்ற ஆக்சிஜன் உபயோகப்படுத்துவதும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட ஒரு காரணமென சொல்லப்படுகிறது. ஆனால் அது முழுக்க முழுக்க ஆய்வுக்குட்பட்டவைதான். இன்னும்  மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அதை இப்போதைக்கு ஏற்க வேண்டாம்.

நிரூபிக்கப்பட்ட இரண்டு வழிகளில், முதல் வகைதான் இப்போது அதிகம் பேருக்கு ஏற்படும் பாதிப்பு. ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் தரப்படும்போது, சைனஸ் பகுதியில் இந்த பூஞ்சை உருவாகி, அந்தப் பகுதியில் பாதிப்பு உருவாகிறது. ஏற்கெனவே ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நபர்களுக்கு, இது மிக வேகமாக அதிகரிக்கும். அதனால் விளைவுகள் மோசமாகும்.”

“முகார் பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் என்னென்ன?”

“கோவிட் சிகிச்சையின் போது அதிகமாக ஸ்டீராய்டு உபயோகப்படுத்தப்பட்டவர்கள், நெகட்டிவ் வந்து 2 வாரம் கழித்து, ரத்த சர்க்கரை அளவில் கவனமின்றி இருந்தால், அப்போது அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்.

இந்த பூஞ்சை வலப்பக்க கண்ணத்தின் மேற்பகுதியில் அதிகம் வளரும் தன்மைகொண்டது என்பதால், அங்கு வலி ஏற்படுவது, உடன் கண் வலி – தலை வலி போன்றவை அறிகுறிகள் தெரியவரும். இந்த அறிகுறிகள் தெரியவந்தால், ஸ்கேன் மூலம் அவை உறுதிசெய்யபட்டு குணப்படுத்தப்படும்.”

“முகார் பூஞ்சைக்கான சிகிச்சைகள் என்னென்ன?”

“இதற்கான சிகிச்சையில், மூன்று முக்கிய நிலைகள் இருக்கின்றன. அவை:

  • உடலின் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படுவது
  • அறுவை சிகிச்சை மூலம், பூஞ்சை தொற்றுகள் உடலிலிருந்து அகற்றப்படுவது
  • ஆன்டி-பூஞ்சை தொற்று மருந்துகள் தரப்பட்டு, மேற்கொண்டு அவை வளரவிடாமல் தடுப்பது”

“தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நிலை என்ன?”

“கொரோனாவிலிருந்து மீளும் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும் என்றில்லை. வெகுசிலருக்குதான் ஏற்படுகிறது. இப்போதைக்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கே இது அதிகம் உறுதிசெய்யப்படும் நிலைதான் சென்னையில் இருக்கிறது. ஏற்படும் சிலரும்கூட, ரத்த சர்க்கரை அளவில் கவனம் செலுத்தாமல் இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகவே உடல்நலனில் கவனத்துடன் இருந்தால், இதை நாம் தடுக்கலாம்.”

“வெள்ளைப் பூஞ்சை தொற்று என்பது என்ன? அது ஏன் ஏற்படுகிறது?”

“கேன்டிடா என்பது ஒருவகை பூஞ்சை. இதுதான் வெள்ளை பூஞ்சை என சொல்லப்படுகிறது. இவ்வகை பூஞ்சை, காய்ச்சல் ஏற்படும் நபர்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது நாக்கின் மேற்பரப்பில் உருவாகும் படலத்தில்கூட இருக்கும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதலின்போது இவ்வகை பூஞ்சை அவர்களுக்கு ஏற்படும். இப்படி சாதாரணமான ஒன்றாகவே இது இப்போது வரை இருக்கிறது. ஆகவே, இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பலாம்.”