சிறப்புக் களம்

ஒரு கப் டீ சாப்டுங்க சார்! - டீயிலுள்ள நன்மைகளும் தீமைகளும்! தெரிந்து கொள்ளுங்கள்!

Sinekadhara

நமது ஊரில் தெருவுக்கு தெரு டீக்கடை, அங்கு எப்போதும் கண்டிப்பாக குறைந்தது 2 பேர் டீக்குடித்துக்கொண்டு இருப்பதை நாம் பார்த்து இருப்போம். குறிப்பாக ஆண்கள் பெரும்பாலும் டீ விரும்பிகளாக இருப்பர். உலகிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் பானமாக டீ இருக்கிறது. காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி அல்லது டீ குடிக்காவிட்டால் 99% பேருக்கு அந்த நாளே தொடங்காது. இதை யுனிவர்செல் ஹேபிட் என்றே சொல்லலாம். அதிலும் காபியைவிட டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் ஒரு கப் டீ குடித்தால் போதும்; அனைத்தும் பறந்துவிடும். டீ குடித்தால் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த கலாசாரத்திற்கு ஏற்றவாறு க்ரீன் டீ, ப்ளாக் டீ மற்றும் ஹெர்பல் டீ என பல்வேறு டீ வகைகளை விரும்பி அருந்துகின்றனர். ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று கப் ப்ளாக் டீ குடிப்பது இறக்கும் அபாயத்தை 9லிருந்து 13% குறைப்பதாக கூறுகிறது புதிய ஆய்வு. மேலும் பால் அல்லது சர்க்கரையைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் இதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்கிறது அந்த ஆய்வு. இதேதான் காபிக்கும் பொருந்தும்.

வழக்கமாக தேநீர் அருந்துபவர்களில் 89 சதவீதம் பேர் பிளாக் டீயை அருந்துவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேபோல் க்ரீன் டீயிலும் பல்வேறு ஆரோக்கியக்கூறுகள் இருப்பதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு. டீயிலுள்ள ஆரோக்கிய நலன்கள் பற்றி கூறுகையில், தினசரி டீ குடிப்பது இதய நோய்கள், டிமென்ஷியா மற்றும் கேன்சர் போன்றவற்றிற்கு எதிராக போராடுகிறது. இந்த பானத்திலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் ரத்தத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி அழற்சியை குறைக்க உதவுகிறது. தினசரி 5 கப் ப்ளாக் டீ குடிப்பது மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆனால் அதேசமயம், சூடான டீயை வேகமாக குடிப்பது உணவுக்குழாயில் வெப்ப காயத்தை உருவாக்கி, சேதப்படுத்தி தொண்டை புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வு எச்சரித்திருக்கிறது. செப்டமர் 21ஆன இன்று தேசிய தேநீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைவராலும் விரும்பி அருந்தப்படுகிற டீயை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

தேநீரின் பக்கவிளைவுகள்:

பதற்றம்: காபியை நீண்ட நாட்களுக்கு அதிகம் எடுத்துக்கொண்டால் ஒருவித நடுக்கம் ஏற்படும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். அதேபோல் டீயிலும் கஃபைன் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதிக டீ, பதற்றம், ஓய்வின்மை மற்றும் சோர்வு போன்ற பல்வேறு பக்கவிளைவுகளை உருவாக்கும்.

சர்க்கார்டியன் சுழற்சியில் குழப்பம்: குறைந்த அளவு டீ குடிக்கும்போது அதிலுள்ள கஃபைன் தூக்கத்தை பாதிக்காது. ஆனால், அதிகளவு டீ குடிப்பது தூக்கத்தை தாமதப்படுத்துவதுடன் சர்க்கார்டியன் சுழற்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆசிட் ரிஃப்ளக்ஸ்: மிதமிஞ்சிய அளவிலோ அல்லது வெறும் வயிற்றிலோ டீயை குடித்தால் எதுக்களித்தல் (அமில பிரச்னை) ஏற்படும். இது வாய்வு, நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

கஃபைன் சார்ந்திருத்தல்: ஆரோக்கிய சீர்கேட்டை உண்டுபண்ணும் அளவிற்கு காபியை எடுத்துக்கொள்வதே கஃபைன் சார்ந்திருத்தல் என்று சொல்லப்படுகிறது. அது காபி அல்லது டீயை தொடர்ந்து அருந்துவதால் ஏற்படக்கூடிய நிலை.

தலைவலி: புத்துணர்ச்சியூட்டும் பானமாக டீ எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அதுவே அதிகமாகும் போது தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.