சிறப்புக் களம்

மீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்!

Sinekadhara

உடலின் இயக்கத்தையும், செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவது உணவுதான். என்னென்ன மாதிரியான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோமோ அதற்கு ஏற்றாற்போலத்தான் உடலும் இயங்கும். உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது மூளைதான். தொடர்ந்து சரியாக சாப்பிடாமல் விட்டால் உடல் எப்போதும் சோர்வாகவே இருப்பதுடன் எந்த செயலிலும் நாட்டம் இருக்காது. இதயம், நுரையீரல் மற்றும் மூளை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் சுறுசுறுப்பாக இயங்கமுடியும்.

மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் சில எளிய உணவுகளை எடுத்துக்கொள்வதன்மூலம் எப்போதும் இளமையுடன் இருக்கலாம்.

மீன்

மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் உணவு என்றாலே லிஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது மீன்கள்தான். அதிலும் நல்ல கொழுப்பு என்று சொல்லப்படுகிற fat மீன்களில் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சால்மன், மத்தி போன்ற மீன்களி ஒமேகா- 3 என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. நமது மூளையில் கிட்டத்தட்ட 60% கொழுப்பால் ஆனது, அதிலும் ஒமேகா 3 அதிகம் நிறைந்தது. இந்த ஒமேகா 3 அமிலங்கள் நரம்பு செல்களை கட்டமைப்பதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. இது வயதாவதையும், அல்சைமர் நோயையும் தடுக்கிறது.

தேவையான ஒமேகா 3 கிடைக்காதபோது, அது கற்றல் குறைபாடுகளுக்கும், மன சோர்வுக்கும் வழிவகுக்கிறது. அதிகப்படியான வேகவைத்த உணவுகளை சாப்பிடுபவர்களின் நரம்பு செல்கள் நன்கு கட்டமைக்கப்பட்டிருப்பதோடு, தெளிவான முடிவு எடுப்பது, ஞாபகத்திறன் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியற்றிஉம் சிறந்து விளங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

காபி

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடித்தால்தான் பலருக்கும் நாளே துவங்கும். அதாவது புத்துணர்ச்சி கிடைக்கும். காபியில் உள்ள கஃபைன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கக் கூடியது. தூக்கத்தை வரவைக்கும் அடினோசின் என்ற ரசாயனத்தை தடுத்து சுறுசுறுப்பை தருகிறது. மேலும் காலையி குடிக்கும் காபியானது நாள்முழுவதும் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவுகிறது.

தினமும் குடிக்கும் காபியானது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும், பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் நோயையும் வராமல் தடுக்கிறது.

மஞ்சள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் முக்கியமானது மஞ்சள். மஞ்சளில் உள்ள குர்குமின், ஞாபக சக்தியை தூண்டுவதுடன், பல நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இது செரடோனின் மற்றும் டோபமைனை தூண்டுகிறது. மூளை செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

ப்ரக்கோலி

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த ப்ரக்கோலி அதிக சக்திமிகுந்த உணவுகளில் ஒன்று. வைட்டமின் கே நிறைந்த ப்ரக்கோலியை ஒரு நாளைக்கு ஒரு கப் எடுத்துக்கொண்டாலே போதுமானது. மூளை செல்களில் அதிகமாக உள்ள ஸ்பிங்கோலிப்பிட்ஸ் உருவாகத் தேவையான் சத்துகள் ப்ரக்கோலியில் உள்ளது. வயதானவர்கள் ப்ரக்கோலியை எடுத்துக்கொண்டால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் புரதம், கால்சியம், வைட்டமின் பி6, பி12, ஃபோலேட், கோலைன் போன்ற எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன. மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதில் கோலைன் முக்கியப்பங்கு வகிக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஏராளம்.

ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 425 மிகி கோலைனும், ஆணுக்கு 550மிகி கோலைனும் தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் 112 மிகி கோலைன் உள்ளது. டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு பொதுவாகவே ஃபோலேட் குறைபாடு இருக்கும். எனவே முதியவர்கள் கட்டாயம் முட்டையை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.