சிறப்புக் களம்

ஊரடங்கில் சுற்றுப்புற அழகும் முக்கியம்: வொர்க் ஃப்ரம் ஹோமில் மனதை இலகுவாக்க சில டிப்ஸ்!

webteam

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்த ஊரடங்கால், மறுபடியும் நாம் நான்கு சுவர் கொண்ட அறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அசாதாரண சூழ்நிலை என்றைக்கு முடிவை எட்டும் என்று விடை தெரியாமல் பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு தற்போது நாமும் நமது இருப்பிடம்தான் உற்ற துணையாக நிற்கின்றன.

ஆகையால் நம்மை பராமரிக்க நாம் எந்தளவு முயற்சி செய்கிறமோ அதே அளவு சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பாகவும், மனதிற்கு இதம் தரும் வகையிலும் மாற்றிக்கொள்ளுதல் அவசியமாகிறது. ஆகையால் இது குறித்து மனநல மருத்துவர் ஸ்வாதிக் மற்றும் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் கவிதா ஹரிஹரன் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் முன்வைத்த விஷயங்களைப் பார்க்கலாம்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக்

நாம் வசிக்கும் இடம் மட்டுமல்ல, அதில் நிலவும் தட்பவெப்பநிலையும் நமது மனநிலையையும் உடல்நிலையையும் பாதிக்கும்.

ஊரடங்கில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் அலுவலக பணி மட்டுமல்லாது, வீட்டிற்கு தேவையான  வேலைகளையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்ததை உருவாக்குகிறது. அதனை அவர்கள் தவிர்க்கும் வண்ணம், ஒரு அறையை ஒதுக்கி அதனை பிரேத்யேக அலுவலக அறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். அங்கு கொடுக்கும் நேரம் அலுவலகத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

அலுவல வேலைக்குத் தேவையான அனைத்துப்பொருட்களையும் முன்னரே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். இந்த நடைமுறையை பணி செய்யும் கணினியிலும் முறைப்படுத்த வேண்டும். இந்த நடைமுறை வேலை நேரத்தின் போது நமக்கு ஏற்படும் தேவையில்லாத மனஅழுத்ததை குறைக்கும்.

வேலையில் அதிக கவனம் செலுத்திய வேண்டிய பணியாளர்கள் மூடிய அறையை பயன்படுத்தலாம். கொஞ்சம் கிரேயேட்டிவாக பணியாற்ற நினைப்பவர்கள் திறந்த வெளியிலான இடத்தை பயன்படுத்தலாம். இது அவரவர் மனநிலையை பொறுத்து மாறுபடும்.

வேலையில் ஈடுபடும் நபர்கள் தங்களின் உந்துசக்திக்காக, நமது இலக்கு சார்ந்த மோட்டிவேஷன் வாக்கியங்களை கொண்ட போஸ்டர்களை சுவர்களில் ஒட்டலாம். மேஜைகளில் சின்ன சின்ன சிலைகளை வைத்து அழகுப்படுத்தலாம்.

குடும்பத்தினனரின் புகைப்படங்களை ப்ரேம் செய்து வைக்கலாம். வைக்கக்கூடியது எதுவானாலும் அது அந்த நபருக்கு தேவையான உந்துசக்தியை கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும்.

செடிகளை வளர்ப்பது என்பது மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கக்கூடியது. அவை நமக்கு நிறைய விஷயங்களை மறைமுகமாக சொல்லிக்கொடுக்கும். இந்தச் செடிகளும் அதில் பூக்கும் பூக்களும் நோயாளிகளுக்கு ஒரு மனநிம்மதியை தரும் என்பது தெரியவந்திருக்கிறது

உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் கவிதா ஹரிஹரன்

நம்மை சுற்றிய இருப்பிடம் தூய்மையாக இருப்பது மிக அவசியம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நம் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக சமையலறை தூய்மையில் அதிக கவனம் தேவை. ஒரே நாளில் அனைத்து வேலைகளையும் செய்வதை தவிர்த்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு அறையை ஒதுக்கி தூய்மைப்படுத்தலாம்.

வீட்டில் சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீடுகளில் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு நிறங்களிலான திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். அதில் சூரிய ஒளிப்படும் போது நிறத்திற்கேற்ப ஒளி வீட்டில் விழும். அது ஒரு நல்ல உணர்வை கொடுக்கும்.

உங்களுக்கு பிடித்த நிறங்கள் சுவர்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

கண்ணாடி பாட்டில்களில் பெயிண்டிங் செய்து அதில் செடிகளை வளர்க்கலாம்.

மணி ப்ளாண்டேஷன் செய்யலாம்.

ஜன்னல்கள் மற்றும் மேஜைகளில் பூக்களை வைத்து அழகுப்படுத்தலாம்.

வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் பணிக்கு நடுநடுவே ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அது பெயிண்டிங், செடிகள் வளர்ப்பது, புத்தகம் வாசித்தல், வீட்டு விலங்குகளிடம் விளையாடுதல், நல்ல பாடல் கேட்பது உள்ளிட்டவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.