சே குவேரா pt web
சிறப்புக் களம்

“மக்களுக்கு எதிரி எனக்கும் எதிரி” - பயணங்களால் உருவான ‘புரட்சியாளர்’ சே குவேரா!

Angeshwar G

பயணம் என்பது என்ன?

பயணம்.. ஒருவருக்கு புதிய மனிதர்களை அறிமுகப்படுத்தும். புதிய உலகைக் காட்டும். பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்களது இன்ப துன்பங்களை அப்படியே நமக்கும் கடத்தும்.. ஓரிடத்தில் இருந்து கிளம்பி, எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும் என அனைத்தையும் திட்டமிட்டு, சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்று, பசுமையையும், மலையையும், புதிய உணவுகளையும் உண்பது மட்டுமே, பயணத்தில் சேருமா என்பது இதை வாசிக்கும் உங்களின் விருப்பத்தைப் பொருத்தது.

ஆனால்,

பயணம் என்பது திட்டமில்லாத ஒன்று. இலக்கு மட்டும்தான் இருக்கும். திட்டம் இருக்காது.
பயணம்

கிடைப்பதை உட்கொண்டு, கிடைக்கும் இடத்தில் தங்கி, அங்கிருக்கும் மனிதர்களுடன் உரையாடி, அவர்களது வாழ்க்கையை புரிந்து, அதிலிருந்து கற்றுக்கொள்வதே பயணம் தரும் அனுபவம். ஒரு நாட்டின் ஒரு நகரின் நிஜ முகத்தை இத்தகைய பயணங்களே காட்டும். உடலுக்குள் என்ன சிக்கல் என்பதை அறுவை சிகிச்சையில் கண்டறிவதுபோல... ‘தென் அமெரிக்காவை சுற்ற வேண்டும்.. அதன் நிஜ முகத்தைக் காண வேண்டும்..’ என நினைத்து 23 வயது இளைஞர் ஒரு பயணம் மேற்கொண்டார்.

அந்தப் பயணத்தின் மூலம் அவர் பெற்ற அனுபவம், மக்களுக்காக அவரை நிற்க வைத்தது, தனது உயிரைவிடவும் வைத்தது. யார் அவர்? தன் பயணத்தில் அவர் என்ன கற்றார்? இதை ஏன் இப்போது சொல்கிறோம்..? இதற்கெல்லாம் பதில்கள், இங்கே...

எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா

எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா (14 ஜூன் 1928 - 9 அக்டோபர் 1967). புத்தகங்கள் மீதும் வரலாறு மீதும் அந்த இளைஞருக்கு தீராத ஆர்வம். எந்த அளவுக்கு ஆர்வம் என்றால், வீடுகளுக்கு விருந்தினர்கள் வந்தால், அதைத் தொந்தரவாகக் கருதி, குளியலறையில் அமர்ந்து மணிக்கணக்காக வாசிக்கும் அளவுக்கு ஆர்வம். அவருக்கு மருத்துவனாக வேண்டும் என்பதே விருப்பம்.

மனித குலத்துக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றைக் கண்டறிய வேண்டும் என்ற கனவு. சிறுவயதில் இருந்து இம்சிக்கும் ஆஸ்துமாக்கு மருந்து கண்டுபிடிக்கும் வேட்கையாகக் கூட மருத்துவத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். கனவுக்காக மருத்துவம் படித்தாலும், ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை மட்டும் சற்றும் குறையவில்லை.

பறக்க நினைக்கும் மனிதர்களுக்கு ஒரே இடத்தில் இருக்கும் வாழ்வு சலித்துப் போகாதா என்ன?

புறப்பட்டார்.. தனது நாடான அர்ஜெண்டினாவை சுற்ற வேண்டும் என்பது திட்டம். ஒரு சைக்கிள் மட்டும்தான் இருந்தது. பரவாயில்லை. எஞ்சின் பொருத்திக் கொள்ளலாம். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். புறப்படலாம்... 21 வயதில் முதல் பயணம் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 6 வாரங்கள் நீண்டிருந்தது அந்த பயணம். 12 மாகாணங்களை சுற்றி இருந்தார். 4500 கிமீ கொண்ட பயணமாக அமைந்தது. இந்த பயணம் அவருக்கு அர்ஜெண்டினாவின் நிஜத்தைக் காட்டியது.

புறப்படலாமே.... அவ்வளவுதான்

பின் மீண்டும் கல்லூரி. இரு வருடங்கள் வேகமாக ஓடியது. மீண்டும் வாழ்வு சலித்தது. தன்னைவிட ஆறு வயது மூத்த நண்பரான கிரானடோவைச் சந்திக்க சென்றார். அப்போது உதித்ததுதான், “இருவரும் சேர்ந்து ஏன் லத்தீன் அமெரிக்காவை சுற்றக்கூடாது”. புறப்படலாமே.... அவ்வளவுதான். அடுத்த பயணம் ஆரம்பம்.. இம்முறை சைக்கிள் அல்ல. இருசக்கர வாகனம். ஜனவரி 4, 1952 ஆம் ஆண்டு la poderosa II என்ற 1939 Norton 500 cc என்ற இருசக்கர வாகனத்தில் பயணம் ஆரம்பமானது.

கை வசம் கொஞ்சம் பணம், உறவினர் கொடுத்த இறைச்சி இதுமட்டும்தான் இருந்தது. நாட்கணக்கில் நீளும் பயணத்திற்கு இது எம்மாத்திரம்.. செல்லும் வழியில் கிடைக்கும் வேலைகளைச் செய்ய வேண்டியது, கிடைப்பதை சாப்பிட வேண்டியது, கிடைக்கும் இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டியது. இதுதான் திட்டம்.

செல்லும் வழியெல்லாம் ஏகப்பட்ட அனுபவங்கள். ஆஸ்துமா வேறு சே குவேராவை அடிக்கடி இம்சித்தது. ஆனாலும், பயணம் தொடர்ச்சியாக நடந்தது. சிலி, பெரு, வெனிசுலா, கொலம்பியா என பயணம் நீண்டது. வயல்வெளி, கடல், ஆறு, பாலைவனம், மலை என அனைத்து நிலங்களையும் கடக்க வேண்டி இருந்தது. பயணத்தின் இடையே மோட்டார் சைக்கிள் தனது வேலையை நிறுத்திக் கொள்ள ‘நடராஜா சர்வீஸ்’ மட்டுமே துணை என்றாகிப் போனது. எப்போதாவது கிடைக்கும் லாரி பயணங்களும் பெரிதாக உதவின.

வீடு திரும்பும் படலம்

வழி முழுவதிலும் இருவரும் பெற்ற அனுபவங்கள் அலாதியானது. பழங்குடி மக்களைச் சந்தித்தனர். சுரங்கங்களில் சுரண்டப்படும் ஏழை மக்களைச் சந்தித்தனர். வயல்வெளிகள், பழங்கால நாகரீகங்கள் சிதைந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்றனர். ஒவ்வொரு இடமும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போதும் இருவரும் மறக்காமல் செல்லும் பகுதி தொழுநோயாளிகள் இருக்கும் மருத்துவமனை. தொழுநோயாளிகளுக்கு உதவுவது, தன்னால் இயன்றதை அவர்களுக்கு செய்வது, தன் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை அவர்களுக்கு கூறுவது என அவர்களுடன் நேரத்தைக் கழித்தார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பகுதி, ஒருபக்கம் செல்வம் என்றால் இன்னொரு பக்கம் ஏழ்மை என கிழித்துவைத்த கோடுபோல எதார்த்தத்தை தெளிவாகக் காட்டியது. ஒரு கட்டத்தில் சேகுவேராவும், கிரானடோவும் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிரானடோ காராகஸில் தங்கி இருந்து சிறிது காலம் தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்ற விரும்பினார். ஆனால், சே குவேரா படிப்பைத் தொடர விரும்பினார். 1952 ஆம் ஆண்டு மீண்டும் வீடு திரும்பினார்.

எட்டு மாதங்கள் தொடர்ந்த பயணம்

எட்டு மாதங்கள் தொடர் பயணம்... அந்தப் பயணத்தின் முடிவில் சே குவேரா எடுத்த முடிவு மக்களுடன் நிற்க வேண்டும் என்பதுதான். பயணங்கள் மூலம் மேலும் மேலும் அவர் மக்களிடம் சேர்ந்துகொண்டே இருந்தார். அதேவேளையில் மக்களுக்கு எதிரி தனக்கும் எதிரி என்ற முடிவையும் பயணமே அவரை எடுக்க வைத்தது. அவரது பயண அனுபவங்களை எல்லாம், மோட்டார் சைக்கிள் டைரி என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. ஐம்பது அறுபதுகளில் லத்தீன் அமெரிக்கா எப்படி இருந்தது என்பதற்கு சேவின் டைரி ஒரு சாட்சி.

நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டுமா, மக்களை அறிய வேண்டுமா... சே குவேராவைப் படியுங்கள். உங்களுக்கு உதவுவார்.