சிறப்புக் களம்

மாநில உரிமைகளுக்கான முழக்கமாகத் திகழ்ந்தவர் அண்ணா

webteam

நாட்டின் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றி சிந்திப்போம், மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள்
எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் என்று அரை நூற்றாண்டிற்கு முன்னரே
எடுத்துரைத்தவர் பேரறிஞர் அண்ணா.

இந்தித்திணிப்பு முதல் நீட் தேர்வு, நவோதயா பள்ளி விவகாரங்கள் வரை மாநில சுயாட்சி குறித்த விவாதங்கள் இன்றைக்கு எழுந்திருக்கின்றன. அரசாங்கத்தின்
குறிப்பிட்ட செயல்களுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ளும் வாக்களிப்பு முறை அமலாக்கப்படாத வரை,
ஜனநாயகத்துக்கான எந்தப் பலனையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது என 1962 இல் நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணாவின் கருத்துதான் இன்றைய தமிழகத்தின்
மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்னைகளில் எதிரொலிக்கிறது.

ஆட்சி புரிந்தது இரண்டே ஆண்டுகள் என்றாலும், பெரியாரின் கொள்கைகளான சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியது, மதராஸ் மாகாணம் என்ற பெயரை
தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது, நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றியது, கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது உள்ளிட்ட திட்டங்கள் மாற்றத்திற்கு வித்திட்டன.

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் இன்று நடந்து கொண்டிருக்க தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை
சட்டமாக்கி இந்தி பேசாத மாநிலங்களுக்கு தமிழகத்தை முன்னுதாரணமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணாதான்.

ஜிஎஸ்டி முறை குறித்து இருவேறு கருத்துகள் இருக்கும் இன்றைய நிலையில், ஏழைகள் வரி, பணக்காரர்கள் வரி குறித்தும் நேர்முக வரி, மறைமுக வரி குறித்தும் 50
ஆண்டுகளுக்கு முன்பு அவர் விளக்கிய விதம் இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

பெரும்பான்மை மக்களின் மொழிதான் இந்தியாவில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது, நாட்டில் காகங்கள் அதிகம்
இருக்க மயிலை தேசியப் பறவையாக தேர்ந்தெடுத்தது ஏன்? என்ற கேள்வி மூலம் முடக்கியவர் அண்ணா.

“தமிழர்களின் உரிமை பறிபோனால் பொறுக்க மாட்டோம்” எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அவரது மறைவுச் செய்தி கோடிக்கணக்கான
தமிழர்களுக்கு தாங்கமுடியாத துயரத்தைக் கொடுத்தது. 1969 பிப்ரவரி 3-ல் அண்ணா மறைவுக்கு கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. மக்கள் சிந்திய
கண்ணீருக்கு பிரதிபலனாக இறந்த ஒரு தலைவன் திரும்பி வர வேண்டும் என்றால் அது அண்ணாவாகத்தான் இருக்க முடியும் என வெளிநாட்டுப் பத்திரிக்கைகள்
எழுதின.

1909-இல் காஞ்சியில் பிறந்து, சென்னையில் பட்டம் பயின்று திருப்பூரில் தந்தை பெரியாரைச் சந்தித்து ஈரோட்டில் பத்திரிகையாளராகி கருத்து வேறுபாடால்
வடசென்னையில் திராவிடர் முன்னேற்றக் கழகம் கண்டு ஆரிய மாயை தீட்டியதால் திருச்சியில் சிறைப்பட்டு பட்டி தொட்டி எங்கும் இந்தித் திணிப்பை எதிர்த்து
1967-இல் முதல்வராகி ஏட்டில் இருந்த பெரியார் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி 1969-இல் மூச்சை நிறுத்திய அண்ணாவின் சமூக சிந்தனை
தமிழகத்தில் பெரும் மாற்றத்தை விளைவித்தது.