பதப்படுத்தப்பட்ட சடலங்கள் PT
சிறப்புக் களம்

உலகை ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்த இரு சடலங்கள்; ’ஏலியன்ஸ்’ குறித்த ஆய்வை முடுக்கிய ஆய்வாளர்!

Jayashree A

உலகை ஒரு நிமிடம் உறைய வைத்த இரு சடலங்கள்!

உண்மையில் ஒரு கணம் உலகையே இந்த செய்தி திரும்பி பார்க்க வைத்துவிட்டது என்பதில் ஐயமில்லை. ஒரு வேளை ஏலியன்கள் இந்த உலகை சுற்றிலும் இருக்குமோ என்ற விவாதத்தை கிளப்பும் அளவிற்கு அந்த உருவங்கள் இருந்தன. ஆம், மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் சமர்பிக்கப்பட்ட இரு பதப்படுத்தப்பட்ட இரு சடலங்களை பார்க்கும் பலருக்கும் இது ஏலியன் ஆக தான் இருக்கும் என உறுதிபடுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால், அறிவியல் உலகம் அவ்வளவு சாதாரணமானது கிடையாது. எந்த ஒன்றினையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் வரை அவை வெறும் ஊகங்களே. அனுமானங்கள் உண்மையை கண்டறிவதற்கான முதல்படிதான். ஆனால், அனுமானங்களே உண்மை ஆகிவிட முடியாது. இது ஏலியான் ஆக இருக்கும் என சில ஆதாரங்களை வைத்து அனுமானிக்க முடியும். ஆனால், உறுதி செய்வதற்கு இன்னும் எவ்வளவோ ஆதாரங்கள் தேவை என்பதே நிதர்சனமான உண்மை.

ஏலியன்ஸ் குறித்து இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை!

பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா? என்பதை அறிவதற்கான ஆய்வுக விண்வெளி துறையில் பல ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனிதர்களை போலவே வேற்று கிரகங்களில் வசிக்கும் ஜீவராசிகளை ஏலியன்ஸ் என்று நாம் அழைக்கின்றோம். ஏலியன்கள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது. இருப்பினும், ஏலியன்ஸ்கள் குறித்த எண்ணிலடங்கா வாய்வெளி கட்டுக்கதைகள் இன்றளவும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஆய்வாளர்!

ஏலியன் இருப்பதை நிரூபித்தே தீருவேன் என்று சில ஆய்வாளர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார்கள். அப்படியொருவர் தான், மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஏலியன் ஆய்வாளருமான ஜெய்ம் மௌசன். இவர்தான் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஏலியன்ஸ் போன்றது என இரண்டு சடலங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்தி உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

2017 ல் பெரு நாட்டின் சுரங்கம் ஒன்றில் இருந்து 5 மம்மிக்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த ஐந்து உடல்களை ஆராய்ச்சி செய்ததில்தான், இரண்டு உடல்கள் மனித உடல்களோடு ஒத்து போகாதது ஆய்வாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எப்படி இருக்கு அந்த சடலங்கள்?!

கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிரேதங்களின் முகங்கள் நீளமாகவும், அதன் மண்டை ஓடு பின்புறம் நீண்டும், அதன் கை கால்விரல்கள் மூன்று தான் இருந்தது. முதலில் இது குழந்தைகளின் உருவம் என நினைத்தார்கள். ஆனால், ஜெய்ம் மௌசன், இது குழந்தைகளின் உருவம் அல்ல.. இது வேற்றுகிரகவாசிகளின் உடல் என்ற முடிவுக்கு வந்துள்ளார். 2017 முதல் கிட்டத்தட்ட 6 வருடங்கள் இவரது குழு ஆய்வு செய்து இந்த முடிவிற்கு வந்துள்ளது.

மெக்ஸிக்கோ காங்கிரஸில், அரசு அதிகாரிகளின் முன்னிலையில் அந்த சடலங்களை காட்சிப்படுத்திய அவர், தான் மேற்கொண்ட ஆராய்சிக்ளில் கிடைத்த முடிவுகளை முன்வைத்தார். இதனை நேரலையில் மெக்ஸிகோ அரசாங்கம் ஒளிபரப்பு செய்தது.

ஆராய்சியின் முடிவுகள் சொல்வதென்ன?

1.  கண்டெடுக்கப்பட்ட ஐந்து மம்மிகளில் இரண்டை தவிர மற்றவை மனித உடல் என்றும், மனித உடல் அல்லாத அந்த இரு உடல்களுக்கு கைகளிலும் கால்களிலும் மூன்று, மூன்று விரல்கள் தான் உள்ளது.

2.     DNA சோதனையில் 30% இது மனிதனின் DNA உடன் ஒத்துப்போகவில்லை

3.     இது மனிதர்களைப்போல் பாலூட்டி இனம் இல்லை

4.     இதன் உடலில் Osmium என்ற மிகமிக அரிய வகை தனிமம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனிமத்தின் உற்பத்தி உலகில் மிகமிக குறைவு. ஆகவே இத்தகைய தனிமமானது வேறு கிரகங்களில் இருக்கலாம்.

5. Radio carbon dating ஆய்வில் அந்த சடலத்தில் இருப்பது 1000 வருடங்களுக்கு முந்தைய எலும்புகள்.

6.  இது ஏலியன் தான் என்று அறுதியிட்டு கூறவும் முடியவில்லை, மேலும் இது மனித இனமும் இல்லை, நாம் வரலாற்றை திருப்பி எழுதும் காலம் வந்துவிட்டதாக கருதுகிறேன்

என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஆராய்சிகளும் விவாதங்களும் நடந்து வருகிறது. 

ஏலியன்ஸ் குறித்தோ பறக்கும் தட்டுக்கள் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் சொல்வது ஒன்றுதான். மர்மமான பொருட்கள் இருப்பது உண்மைதான். ஆனால், வேற்று கிரக வாசிகளா என்பது இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை என்றே சொல்கிறார்கள். அது குறித்து ஆய்வு மேற்கொள்ள தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.