சுற்றுச்சூழல்

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" - இன்று உலக சுகாதார தினம்!

webteam

உலக மக்களுக்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்யம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று 1948-ம் ஆண்டு  உலக நலவாழ்வு அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு  ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை, உலக சுகாதார தினமாக அறிவித்து 1950 முதல் கடைபிடித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரம் தொடர்பான ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு அனைவருக்கும் ஆரோக்யம் என்ற கருப்பொருளுடன் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான #HealthForAll என்ற ஹேஸ்டேக்கையும் உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த சுகாதார தினத்தன்று நம் உடல்நலம் பேணுவது குறித்து நாம் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்றைய சூழலில் உடல் நலத்துக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.  உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நாளுக்கு நாள் புதிது புதிதான நோய்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. உடல் நலம் பேணுவதில் நாம் அதிகம் கவனம் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறையாக உள்ளது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அப்படியான நோயற்ற ஆரோக்யமான வாழ்க்கைக்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில டிப்ஸ்:

  • அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஜிம்மிற்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாக்கிங், ஜாக்கிங், வீட்டிலேயே சிறிய சிறிய உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம்
  • ஆரோக்யமான உணவை சரியான நேரத்துக்கு உட்கொள்ளுதல். பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்
  • உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல். சரியான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுதல்
  • உடல்நலம் ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால் மனதளவிலும் ஆரோக்யம் தேவை. அதனால் மன அழுத்தம் குறைய யோகா, தியானம் போன்றவைகளை அன்றாடம் செய்யலாம்
  • இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் பலரின் தூக்கத்துக்கு எதிராக இருக்கின்றன. சரியான நேரத்துக்கு தூங்குதல். அதே போல் அதிகாலை எழுதலே மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
  • உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருத்தல். சரியான நேரத்தில் தேவையான தண்ணீர் குடித்தல். கால நிலைக்கு ஏற்றவாறு பழச்சாறு குடித்தல் போன்றவை உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும்.
  • புகை, மது போன்ற பழக்கங்களை அடியோடு விட்டொழித்தல்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நோயற்ற ஆரோக்யமான உடல்நலம் இருந்தால் தான் வாழ்வின் எந்த சவாலையும் நாம் எதிர்கொண்டு நிற்க முடியும் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.