சுற்றுச்சூழல்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு

JustinDurai
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் புலிகள் காப்பகத் திட்டத்தைச் செயல்படுத்த முதல் தவணையாக ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1411.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள, தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இங்கு 60 புலிகள் வாழ்வதோடு, 111 சிறுத்தைகள், 800 யானைகள் வாழ்வதாக அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புலிகள் காப்பகங்களின் மேலாண்மை குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் கானுயிர் வாழ்விடமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்கிறது. இந்தியாவில் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட புலிகள் காப்பகத்திற்கான விருதினையும் இக்காப்பகம் பெற்றுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 9 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திட்டம் தொடர இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நிர்வாக ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் புலிகள் காப்பகத் திட்டத்தைச் செயல்படுத்த முதல் தவணையாக 4 கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்தை அனுமதித்து விடுவிக்குமாறு முதன்மை தலைமைக் வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலர் கோரி இருந்தார். அதனைப் பரிசீலித்த தமிழக அரசு, சத்தியமங்கலம் புலிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவினங்களைச் சமாளிக்க 2021-2022 ரூ.4 கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்து 200 ரூபாயை முதல் தவணையாக ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது.