சுற்றுச்சூழல்

திடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்

"வெயில் காலத்துல பேஃன் போடாமா தூங்க முடியல, குளிர் காலத்துல பேஃன் ஆஃப் பண்ணா கொசுக் கடிக்குது குளிர் தாங்க முடியல" இதுதான் இப்போது அனைவரின் புலம்பலாக இருக்கிறது. தமிழகம் முழுவதுமே கடுங் குளிர் நிலவி வருகிறது. தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கூட கடும் குளிர். வால்பாறை போன்ற மலைவாசத்தலங்களில் 3.5 டிகிரி செல்சியஸ் வானிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதம் வரை பனிக் காலமாக அறியப்படுகிறது. இந்த மூன்று மாதத்துக்கு பின்பு நாம் கடும் வெயிலையும் சந்தித்து ஆக வேண்டும். ஆனால், வெயில் காலத்தை விட நாம் நம் உடலை அதிகமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது பனி காலத்தில்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஏன் பனி காலத்தில் அதிக பாதுகாப்பு ?

தமிழகத்தை பொறுத்தவரை பனிக்காலம் ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும். இதனால் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக் காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும்.  இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல்  மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ்  குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. 

குளிர் காலத்தில் காய்ச்சல் வந்தால் ?

குளிர் காலத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகம் ஏற்படும். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட்  ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். சிட்ரிக் அமிலம் அதிகமிருக்கும் பழங்களான சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் புளிப்பு மிகையாக இருக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது என்பதை கவனிக்க வேண்டும். 

காய்ச்சிய நீரை பருகுங்கள் !

குளிர் காலங்களில் ஜீரணி சக்தி குறைவாகவே இருக்கும். எப்போதும் போல குளிர்ந்த நீர் குடிப்பதை முற்றிலுமாக தவரிக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிப்பதால் தொண்டை வலி ஏற்படும். அதனால் எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை  வலியும் வராது. அதேபோல வெண்ணீரில் கொஞ்சம் ஜீரகமும் கலந்து குடிக்கலாம். கேரளாவில் பெரும்பாலும் ஜீரக தண்ணீரை குடிப்பதற்கு வழக்கமாக வைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். 

குழந்தைகள் எப்படி பாதுகாப்பது ?

குழந்தைகளுடன் வெளியே செல்லும் போது அவர்களை முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஸ்வெட்டர் ஆடைகளை மாலையில் இருந்து இரவு வரை அணிவிப்பது, குழந்தைகளுக்கு கதகதப்பை தரும். மேலும் குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு  முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். பனி காலத்தில் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

வயதானவர்களுக்கு எப்படி ?

குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.  இந்த சளிப்பிரச்னைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். எனவே வயதானவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கம்பளி ஆடைகளை இரவு நேரங்களில் அணியலாம். மாலை நேர உணவுகளான பஜ்ஜி உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது. குழந்தைகள் போல அவர்களும் வெதுவெதுப்பான ஜீரக நீரையே குடிக்க வேண்டும்.