சுற்றுச்சூழல்

பொலிவிழந்து மாறிவரும் பூமி - கதிகலங்க வைக்கும் புகைப்படங்கள்

sharpana

இன்று உலக பூமி தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, புவி வெப்பமயமாதலால் பூமிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சாட்டிலைட் புகைப்படத்துடன் கூகுள் நிறுவனம் டூடுலாக வெளியிட்டுள்ளது.

உலக பூமி தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், வெப்பமயமாதலில் இருந்து பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அந்த டூடுல்-ஐ வெளியிட்டுள்ளது. கூகுள் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உலகின் நான்கு வெவ்வேறு பகுதிகள் அடைந்துள்ள மாற்றத்தை உணர்த்தும் வகையில் ஜிஃப்-அனிமேஷன் உதவியுடன் சாட்டிலைட் புகைப்படங்களை டூடுலாக வெளியிட்டுள்ளது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/bedGuHAPeB4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ஆப்ரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ மலை உச்சியில் 1986 ஆம் ஆண்டு இருந்த பனிப்பாறைகளின் அளவு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறைந்திருப்பதை கூகுள் டூடுல் வெளியிட்டுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெளிவாக காண முடிகிறது. இதேபோல், கிரீன்லாந்தில் உள்ள செர்மெர்சூக் பகுதியில் இருந்த பனிப்பாறை 20 ஆண்டுகளில் கரைந்து காணாமல் போயிருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான பனிப்பாறை இருந்த இடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை புகைப்படங்களாக காட்டியுள்ள கூகுள் டூடுல்.

ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் இருந்த கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் பவளப்பாறையின் பொலிவற்ற தோற்றத்தை மற்றொரு புகைப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த புகைப்படங்கள் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை எடுக்கப்பட்டவை. இறுதியாக ஜெர்மனியில் எலென்ட் பகுதியில் உள்ள ஹார்ஸ் காடுகள் அழிந்து வருவதை கூகுள் டூடுல் காட்டியுள்ளது. 1995ஆம் ஆண்டு பசுமையாக காணப்பட்ட அடர்ந்த காடு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் 2020ஆம் ஆண்டு வறட்சியால் பசுமை மாறியிருக்கும் காட்சியை சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் கண்முன்னே நிறுத்தியுள்ளது.

வெப்பமயமாதல், காலநிலை மாற்றத்தால் பொலிவிழந்து வரும் பூமியின் தோற்றம் கதிகலங்கவே செய்கிறது. நாம் வாழும் இந்த பூமியை, பாதுகாப்பாக அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைப்பது அனைவரது கடமை என பூமி தினத்தில் உறுதியேற்போம்.