சுற்றுச்சூழல்

நினைவாற்றலை அதிகரிக்கும் உடற்பயிற்சி

webteam

நாம் அன்றாட வாழ்வில் செய்யும் கடினமான உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி ஞாபக திறனையும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

உலகளவில் வயதானவர்களை அதிகளவில் தாக்கும் நோய்கள் டிமென்ஷியா மற்றும் அல்சைமர். வயதான காலத்தில் முதியவர்களை தாக்கும் மறதி மற்றும் ஞாபக சக்தி குறைவுதான் இந்த நோயின் அறிகுறிகள். இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு புதிய மருத்துவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மறதியால் அவதிப்படும் முதியோர்களை அழைத்து தினமும் 20 நிமிடம் தொடர்ந்து 6 வாரங்களுக்கு அளிக்கப்பட்ட உடற்பயிற்சியின் மூலம் அவர்கள் மூளையின் ஞாபக திறன் முன்பை விட அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்தியவர் கனடாவின் ஒன்டாரியோவின் மாக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாறி வரும் ஜெனிபர் ஹெய்ச்சின். நரம்பியல் புலனுணர்வு குறித்து இவர் நடத்திய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து பேராசிரியர் ஜெனிபர் கூறுகையில், கடுமையான உடற்பயிற்சிகள் உடல் எடையை மட்டும் குறைக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. இது மிகவும் தவறான ஒன்று. நாம் தினமும் செய்யும் உடற்பயிற்சியால் நமது மூளையின் ஞாபக திறனை அதிகரிக்க முடியும். இந்த உண்மையை புரிந்து கொண்டால் மாணவர்கள் தங்களின் சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியை மேற்கொண்டு ஞாபக திறனை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் உடற்பயிற்சிகள் எவ்வாறு ஞாபக திறனை அதிகரிக்க உதவுகிறதோ அதே போல் சிறு வயதில் இருந்தே நாம் உண்ணும் பச்சை காய்கறிகள், சில வகையான நட்ஸ்களும் மூளையின் செயல்பாடுகளுக்கு அதிகளவில் உதவுகிறது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெனிபர் ஹெய்ச்சின் தெரிவித்துள்ளார்.