சுற்றுச்சூழல்

சுகாதாரத்தை அளவிடும் பணியில் இந்தியாவை சுற்றிவரும் கோவை பெண்மணி..!

webteam

கோவையைச் சேர்ந்த சங்கீதா என்ற 52 வயதான பெண்மணி, நாடு முழுக்க பயணித்து நகரங்களில் தனி நபர் சுகாதாரத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஓமன் அரசின் ஆலோசகராக பணியாற்றி வந்த சங்கீதா, சொந்த நாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தில், பணியை ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் தனி நபர் சுகாதாரம் எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது என்பதை அளவீடு செய்யத் திட்டமிட்டு, சுகாதாரத்தை வலியுறுத்தும் பரப்புரைப் பயணத்தை தொடங்கினார். அதற்காக டாடா நிறுவனம் பரிசளித்த காரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி தனி ஆளாக தனது பயணத்தை சங்கீதா தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள 150 நகரங்களில் பயணித்து, அங்குள்ள சுகாதாரத்தை அளவிட்டு தன் செயலியில் பதிவிடுவதே அவரது பயணத்தின் நோக்கம். 

அதற்காக, தான் பயணிக்கும் காரையே வீடாக்கி, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இவர், 80 சதவிகித நகரங்களின் சுகாதாரத்தை அளவிட்டிருக்கிறார். 

இதுகுறித்து சங்கீதா கூறுகையில், “என்ன மாதிரி எந்த ஒரு பெண்ணும் யாருடைய துணை இல்லாமலும் இந்தியாவில் எப்பகுதிக்கும்
சென்று வர முடியும். அதற்கான சிறு முயற்சிதான் இது. பெண்கள் பாதுகாப்பின் ஒரு அடையாளமே என் பயணம். மீதமுள்ள 20
சதவிகிதம் பயணத்தை முடிக்க முதலமைச்சரிடம் இருந்து நிதி எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.