சுற்றுச்சூழல்

மதுரை: டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

Sinekadhara

மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.

கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்று அதிகரித்து தற்போது குறைந்துவரும் நிலையில், மதுரையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் வசித்துவரும் சத்தியபிரியா என்பவரின் இரண்டு மகன்களுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதில் 7 வயது இளையமகன் திருமலேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 9 வயதான திருமலேஷின் சகோதரன் மிருத்தின் ஜெயனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த சிறுவன் திருமலேஷின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர். அப்பகுதியில் மதுரை மாநகராட்சியும், சுகாதாரத் துறையுன் விரைந்து செயல்பட்டு, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.