கல்வி

`தற்காலிக ஆசிரியர்களை அரசு பணி நியமனம் கூடாது’- டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

நிவேதா ஜெகராஜா

பள்ளிக் கல்வி துறையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யக் கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக் கல்வி துறையில் ஆசிரியர் நியமனம் செய்ய இருக்கின்றனர். இதில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், நீண்ட காலமாக ஆசிரியர் தகுதி எழுதியிருக்கும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

13331 தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக சென்னை DPI வளாகத்தில் 2வது நாளாக நடந்த இந்த ஆசிரியர் போராட்டத்தை ஆதரித்து, DYFI சி.பாலசந்திரபோஸ் மாநில இணைச்செயலாளர் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்துரு ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.