கல்வி

கருணாநிதி இருந்திருந்தால் புதியகல்விக்கொள்கையை ஆதரித்திருப்பார் - கே.பி.ராமலிங்கம்

webteam

தற்போது கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் புதியகல்விகொள்கையை ஆதரித்திருப்பார் என திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கதர்கடை அருகே கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் திமுக விவசாய அணி செயலாளரும் முன்னாள் திமுக மாநிலங்களவை எம்.பியுமான கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போது கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்திருப்பார். வரவேற்றிருப்பார். ஏற்றிருப்பார். அவர் இல்லாத குறை நாட்டில் நடைபெற்று கொண்டிருகிறது. புதிய கல்விக்கொள்கையின் முழுமையான பயன்களை அறியாமல், புரியாமல் சிலர் எதிர்த்து வருகின்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக அவர் இருந்தபோது கருணாநிதி சொன்ன கருத்துக்களை ஏற்றுதான் இந்த புதிய கல்விக் கொள்கையே வந்திருக்கிறது என்பது புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான நீண்ட விளக்கத்தை மிக விரைவில் தர இருக்கிறேன். புதிய கல்விக்கொள்கையில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கிறது. இது எந்த அளவிற்கு மிக உயர்ந்த இடத்திற்கு செல்லப்போகிறது. கருணாநிதி இதை எப்படி ஆதரித்திருப்பார் என்பது குறித்து மிக விளக்கமாக சொல்ல இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கையை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட கே.பி.ராமலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.