கல்வி

தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க இஸ்ரோ விஞ்ஞானி தலைமையில் குழு

webteam

தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் கொண்ட குழுவினை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. நாட்டின் பன்முகத் தன்மையைக் கணக்கில்கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வகுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜே.அல்போன்ஸ் கனம்தானம், அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம்சங்கர் குரீல், மொழியியல் துறை வல்லுநர் டி.வி.கட்டிமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் நூறு சதவீதம் கல்வி பெறுவதில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கனம்தானம். அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் குரீல், வேளாண்மை அறிவியல் மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் சிறந்த அறிஞராக இருப்பவராவார்.