கல்வி

நீட் தேர்வு கெடுபிடிகள் : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

நீட் தேர்வு கெடுபிடிகள் குறித்து மத்திய தேர்வு முகமை, மத்திய அரசு 4 வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தபட்டு வருகிறது.
இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது எனவும், பர்ஸ் வைத்திருக்ககூடாது மற்றும் வாட்ச் அணிய கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபட்டுவருகிறது.

இந்த கட்டுபாடுகள் காரணமாக, ஆண்டு தோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கபடுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால் இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவேண்டும் எனவும், ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்ககூடாது என உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டு துறை, பொது சுகாதார சேவை இயக்குனர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு ஆகியவற்றிற்கு உத்தரவிட்டனர்.