கல்வி

அரசுக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை... புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

webteam

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலியால், காலியிடங்களை நிரப்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 109 அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் முதலாம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகக் கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 4ம் தேதியுடன் நிறைவடைந்தது.

சுமார் 20 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பிய நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன், அனைத்து அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், " கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களுடைய விண்ணப்பத்தை, தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை வழங்கலாம். சுழற்சி 1-ல் இடம் கிடைக்காதவர்களுக்கு, சுழற்சி 2-ல் இடம் அளிக்கலாம்.

இருக்கும் இடங்களைக் காட்டிலும் குறைவாக விண்ணப்பம் பெற்ற கல்லூரிகளில், மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி மீதுமுள்ள இடங்களை நிரப்ப முதல்வர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர் சேர்க்கைக் குழுவினர் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், முதல்வரின் வழிகாட்டுதலுடன் சேர்க்கையை நடத்தி முடிக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.