கல்வி

கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கவலைக்குரியது - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வேதனை

கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கவலைக்குரியது - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வேதனை

Veeramani

கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கவலைக்குரியது  என்று மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வேதனை தெரிவித்திருக்கிறார்

தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் வலியுறுத்திய கோரிக்கையில்,  ஒடுக்கப்பட்ட சாதிப்பின்னணியில் உள்ள மக்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான பாகுபாடு மிகவும் கவலைக்குரியது. நமது கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம், மிஷன் பயன்பாட்டு முறையின் கீழ் எஸ்.சி., எஸ்.டி.  மற்றும் ஓ.பி.சி. சமூகங்களில் இருந்து ஆசிரிய பணியிடங்களை செப்டம்பர் 2022-க்குள் நிரப்ப இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களை கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சில ஐ.ஐ.டி.கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால், அதற்கான செயல்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெறவில்லை. மேற்கூறிய நிறுவனங்களில் விரைவான ஆட்சேர்ப்பு இயக்கத்தை உறுதிசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோல அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக மாதாந்திர அறிக்கைகள் பொதுஅளவில் கிடைக்கச் செய்ய வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு கோட்பாடுகளின்படி ஆட்சேர்ப்பு இயக்கம் நடைபெறுவதை உறுதிசெய்ய சிறப்பு உயர்நிலைக்குழுவும் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.