கல்வி

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்... 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்

webteam

தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு முதல்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 ம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக உயர்கல்வித்துறை கல்லூரி மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்துகிறது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல் கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது இமெயில் மூலம் ஆகஸ்ட் 26 ம் தேதியன்று தகவல் தெரிவிக்கப்படும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடுத்தகட்டப் பணிகளுக்காக அந்தெந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வித்துறையின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு படிப்புக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.