Murder case pt desk
குற்றம்

தேனி: குடும்பத் தகராறில் மனைவி, மாமனாரை குத்திக் கொன்ற மருமகன் தலைமறைவு - நண்பர் கைது

webteam

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமாபட்டியைச் சேர்ந்தவர் மாயன் (55). இவர் தனது மகள் பவித்ராவை (25), உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்த பூவேந்தர் (27) என்பவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்துள்ளார். திருமணத்திற்குப் பின்பு சொரக்காபட்டியில் வசித்து வந்த இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

Police station

இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் வீட்டில் இருந்து பவித்ராவை அழைத்துக் கொண்டு வந்த தந்தை மாயன், பழனிச்செட்டிபட்டி முருகன் கோயில் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக தங்கியிருந்துள்ளனர். இதையடுத்து இன்று பழனிச்செட்டிபட்டி வீட்டிற்கு தனது நண்பருடன் வந்த கணவர் பூவேந்தர், தனது மனைவி பவித்ராவையும் தடுக்க வந்த மாயனையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

அப்போது பூவேந்தருடன் வந்த அவரது நண்பர் முருகேசன் என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து கொலையுண்ட மாயன் மற்றும் பவித்ராவின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான பூவேந்தரை தேடி வருகின்றனர்.