கைது செய்யப்பட்ட இளைஞர்கள் file image
குற்றம்

நண்பனுக்காக புல்லட் திருடி சர்பிரைஸ் கொடுத்த இளைஞர்; மீண்டும் சிறைக்குச் சென்ற சோகம் - என்ன நடந்தது?

PT WEB

புதுச்சேரி, லாஸ்பேட்டை அவ்வை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள் (24). இவர் அதே பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்கதவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 4-ஆம் தேதி புல்லட் பைக்கை தன்னுடைய கடையின் எதிரே நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று விட்டு, மீண்டும் வந்து பார்த்த போது புல்லட் பைக் வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக லால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இரண்டு இளைஞர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தைக் கொண்டு ஆதிகேசவனின் புல்லட் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை லால்பேட்டை போலீசார், புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரசாணையில், சிசிடிவி வீடியோவில் இருந்தது கரியமானிக்கம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பதும், இவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனந்த், ருத்ரேஷ், அஜித்

இவர் அடிதடி வழக்கில் கைதாகி சிறையிலிருந்த போது, பெரியார் நகரைச் சேர்ந்த ருத்ரேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியே வந்த பிறகு இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அப்போது ருத்ரேஷ் தனக்கு புல்லட் பைக் வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்காக அஜித்குமார் தன்னுடைய நண்பரான ஆனந்த்துடன் சேர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆதிகேசவ பெருமாளின் புல்லட்டை திருடி ருத்ரேஷுக்கு பரிசளித்தது தெரியவந்ததுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆனந்த், ருத்ரேஷ், அஜித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் புல்லட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர்.