குற்றம்

சாம்பாரில் புழு இருந்ததாக கூறி பிரபல பிரியாணி கடையில் பணம் பறிக்க முயன்றதாக 6 பேர் கைது

நிவேதா ஜெகராஜா

சேலத்தில் பிரபல பிரியாணி கடையில் வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாக எழுந்த புகாரில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது போலியாக புகார் தெரிவித்து பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா பகுதியிலிருந்து நெடுஞ்சாலை நகர் செல்லும் சாலையில் பிரபல பிரியாணி கடையொன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேற்று வாடிக்கையாளர் சிலருக்கு பரிமாறப்பட்ட பயணிக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே கடையின் உரிமையாளர் ஆதம்பாஷா, வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்த சிலர் சாம்பாரில் புழு இருந்ததாக பொய்யான புகார் கூறி பணம் பறிக்க முயன்றதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(வயது 28), அவரது நண்பர்களான புதுக்கோட்டையை சேர்ந்த பல்மருத்துவர் பாஸ்கரன் (வயது 28), மற்றொரு பல் மருத்துவர் பெரம்பலூரை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 28), சித்த மருத்துவ மாணவர் கோபிநாத் (வயது 25), சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 29), ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ரோஜன் என்கிற பிரபு (வயது 33) ஆகியோரை கைது செய்துள்ளனர். போலியாக புகார் தெரிவித்து பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.