குற்றம்

ஆன் லைன் ஆப் மூலம் ரூ.4000 கடன்; நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் இளைஞர் தற்கொலை

ஆன் லைன் ஆப் மூலம் ரூ.4000 கடன்; நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் இளைஞர் தற்கொலை

webteam

ஆன்லைன் ஆப் மூலம் 4 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய இளைஞருக்கு, அந்த நிறுவனம் கொடுத்த மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த பழையனூரைச் சேர்ந்தவர் விவேக் (27). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக, சில நாட்களுக்கு முன் கெட்ரூபி.காம் மூலம் 4ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றார்.

ஆனால், குறித்த நேரத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் விவேக்கை தகாத வார்த்தைகளால் மிரட்டி வந்துள்ளனர். 

இது மட்டுமன்றி விவேக்கை பற்றி அவரின் நண்பர்களுக்கு அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனை பார்த்த விவேக்கின் நண்பர்கள் போன் செய்து அவரிடம் விசாரித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவேக், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விவேக்கின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விவேக்கின் தற்கொலைக்கான காரணமான கடன் வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவேக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் படாளம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.