கொலை வழக்கு குற்றவாளிகள் PT
குற்றம்

விருதுநகர்: முதியவரை குடும்பமாக சேர்ந்து அடித்துக் கொலை.. பெண் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் கைது!

PT WEB

ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் சத்யசீலா உட்பட இருவரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். மேலும் அந்த பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்தவர் ராமர் (60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (65) குடும்பத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம்

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவின் போது, கோயில் பிரகாரத்தில் சிங்கம் சிலை வைக்க வேண்டும் என ராமசாமி மகன் ராம்குமார் கூறியுள்ளார்.

அதற்கு ராமர் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ராமசாமி, அவரது மகன்கள் ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கல் மற்றும் இரும்பு கரண்டியால் ராமரை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராமர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் உயிரிழப்பு!

இதுகுறித்து ராமரின் மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் ராமசாமி, ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

ramkumar

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய நகர காவல்துறையினர் ராமசாமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய ராம்குமார் மற்றும் ஒரு பெண்ணை தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைதான பெண் காவல் ஆய்வாளர்!

இன்று ராம்குமார் உடன் கைதான பெண் சத்யசீலா என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

பெண் காவல் ஆய்வாளர்

இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவிட்டுள்ளார்.