குற்றம்

ஜெராக்ஸ் கடையில் போனை திருடும் மர்ம நபர் - போலீஸ் வலைவீச்சு

webteam

தாம்பரம் அருகே ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் பெண்ணின் செல்போனை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூரில் காமராஜர் சாலையில் சரண் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர், இரவு 8 மணியளவில் பணிமுடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது செல்போனை காணவில்லை. அவர் எங்கு தேடியும் செல்போன் கிடைக்காத நிலையில், அதனை யரோ திருடிவிட்டனர் என்ற முடிவிற்கு வந்தார்.

பின்னர் அந்தப் பெண் கடையில் சிசிடிவி கேமராவின் காட்சிகளை சோதித்து பார்த்திருக்கிறார். அப்போது மாலை 5.45 மணிக்கு கருப்புச் சட்டை அணிந்த ஒரு வாலிபர் கையில் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு, கடையின் அருகில் வந்து நின்றுள்ளார். அப்போது பெண் ஊழியர் கணினியில் வேலை செய்துகொண்டிருக்க, ஜெராக்ஸ் மிஷின் அருகேயுள்ள மேஜையின் மீது இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை அந்த நபர் திருடிச் சென்றுள்ளார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் மற்றும் கடையின் உரிமையாளர் இருவரும், திருட்டு குறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.