குற்றம்

பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தாய்!

Sinekadhara

ஒடிசாவில் 9 வயது பெண் குழந்தையை ரூ.15 ஆயிரத்துக்கு குழந்தையில்லாத தம்பதிக்கு விற்ற பெண்ணை போலீஸார் கைதுசெய்துள்ளானர்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதைத் தாண்டிய பெண் ஒருவர் பிறந்து 9 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை, குழந்தையில்லாத ஒரு தம்பதியருக்கு விற்றுவிட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று விசாரித்ததில், தினசரிக்கூலிக்கு வேலை செய்துவந்த அந்தப் பெண்ணுக்கு ஊரடங்கு காரணமாக வேலை எதுவும் இல்லை எனவும், ஏற்கெனவே அவருக்கு 5 குழந்தைகள் இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் கணவர் விட்டுச் சென்றுவிட்டதாகவும் அந்தப் பெண்ணின் தந்தைக் கூறியிருக்கிறார்.

அவர்களுக்கு கிடைத்த தகவல்படி, குழந்தையை வாங்கிச் சென்ற குடும்பத்தை சோதனைசெய்தபோது, அவர்களிடம் குழந்தை இருப்பது தெரியவந்திருக்கிறது. விசாரித்ததில், அவர்கள் தத்தெடுத்து வந்ததாகக் கூறியிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் குழந்தையை கைப்பற்றிய அதிகாரிகள் தற்போது மாவட்ட குழந்தைகள் நலவாரியத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் சாகர் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு கொடுத்த தகவலில் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தையை விற்ற வாங்கியக் குற்றத்திற்காக குழந்தையின் தாய் மற்றும் அந்தத் தம்பதியினரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.