குற்றம்

உசிலம்பட்டி: சொத்துத் தகராறில் உடன்பிறந்த தம்பிகளால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!

webteam

உசிலம்பட்டி அருகே சொத்துத் தகராறில் உடன் பிறந்த அண்ணனை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தம்பிகள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு காசி ராஜா, விருமாண்டி, ஐக்கோர்ட் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் பூர்வீக வீட்டில் குடியிருப்பது தொடர்பாக மூத்த அண்ணன்களான விருமாண்டி மற்றும் காசிராஜா ஆகியோருக்கும் தம்பிகளான ஐக்கோர்ட் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதையடுத்து நள்ளிரவில் மதுபோதையில் வந்த ஐக்கோர்ட் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் இவர்களின் நண்பரான செல்லூரைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய மூவரும் அண்ணன் விருமாண்டி வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார், விருமாண்டி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த படுகொலை தொடர்பாக ஐக்கோர்ட் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் கூட்டாளியான சரத்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்துத் தகராறில் உடன்பிறந்த அண்ணனையே தம்பிகள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.