accused pt desk
குற்றம்

பொன்மலை: ரயில்வே பணிமனையில் மின் மோட்டாரை திருடியதாக ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் கைது

webteam

திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள் மற்றும் புகழ்வாய்ந்த ஊட்டி மலை ரயில் இன்ஜின் ஆகியவை பழுதுபார்த்து சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது.

ponmalai work shop

வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்; இருந்து ரயில்வே பணிமனைக்குத் தேவையான உதிரி பாகங்களை லாரிகளில் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் பணிமனையில் இருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்வதும் வழக்கம். இந்த நிலையில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

rail engine

அப்போது அந்த லாரியில் ரயில் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசார், அந்த லாரியில் இருந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினார்கள். பணிமனையில் இருந்து மின் மோட்டாரை கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கோபால் (30), மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள மற்றொருவரை தேடிவருகிறார்கள்.

பணிமனையில் நடந்து வரும் கிளீனிங் ஒர்க் பணியை காண்ட்ராக்ட் எடுத்துள்ள இவர்கள், தினமும் லாரிகளில் தொழிற்சாலைகள் இருக்கும் தேவையற்ற குப்பை மற்றும் மணல் முட்டுகளை அகற்றி வருகின்றனர். அப்போது மின் மோட்டாரை லாரியில் திருடி வைத்து மேலே மணலை கொட்டி கடந்த முயன்றதையும் விசாரணையில் ஒத்துக் கொண்டனர்.

RPF station

இதையடுத்து ரயில்வே போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.