Accused pt desk
குற்றம்

திண்டுக்கல் | ரூ.4.66 கோடி பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம்: பெண் அலுவலர் உட்பட இருவர் கைது

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் நெட்டுத் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர், திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்நிலையில், நாள்தோறும் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்தும் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி ஆகிய பணத்தில் இருந்து ரூ.4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலியான ஆவணங்கள் தயார் செய்தும், மாநகராட்சி அதிகாரிகள் போன்று போலி கையெழுத்து போட்டும் கையாடல் செய்துள்ளார்.

Saravanan

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணி, பணம் கையாடல் செய்ததாக சரவணன் மற்றும் முறையாக கண்காணிக்காத கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.

இதைத் தொடர்ந்து கையாடல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் மாநகராட்சி ஆணையர் மோசடி குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சரவணனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் சரவணனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாநகராட்சியில் பணியாற்றும் சில அலுவலர்களுக்கு இந்த கையாடல் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று 08.08.24 குற்றப்பிரிவு போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், ஆகியோரை கைது செய்தனர்.

Dindigul Corporation

இதையடுத்து அவர்கள் இருவரையும் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தி, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிறையில் அடைக்கப்பட்டனர்.