போக்சோவில் இருவர் கைது pt desk
குற்றம்

திருவண்ணாமலை: வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் இருவர் கைது

தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: மகேஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள், செல்வராஜ் (45) மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் (36). இவர்கள் இருவரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளனர். அப்படி கணவனை இழந்த பெண் ஒருவரிடம் கடன் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

Pocso case

அங்கு அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து வெளியில் தெரியக்கூடாது என அந்த பள்ளி மாணவியை அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த மாணவி துணிச்சலுடனும் தைரியத்துடனும் அருகிலிருந்த உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பிரிவு நல அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன், தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போக்சோ வழக்கு

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.