Accused pt desk
குற்றம்

தஞ்சாவூர்: மனைவிக்காக போட்ட திட்டம்... மாமனாருக்கு நேர்ந்த துயரம் - மருமகன் உட்பட இருவர் கைது

webteam

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ மனோகரன் (71). திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த மே 14-ஆம் தேதி குளியலறையில் வாயில் துணிவைத்த நிலையில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது மூத்த மகள் மனோ ரம்யா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

House

தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜ மனோகரின் மூத்த மகள் மனோ ரம்யா, திருமண தகவல் மைய செயலி மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமாலூரை சேர்ந்த ராஜகுமார் (43) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜகுமார் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டு அவரது நண்பரான சரவணகுமாருடன் 14-ஆம் தேதி வீட்டின் பின்புறம் சுவர் ஏறிக் குதித்து மனோ ரம்யாவை கொலை செய்ய காத்திருந்துள்ளார்.

Arrested

ஆனால், மனோ ரம்யா குளிக்க வராத நிலையில், அவரது தந்தை ராஜ மனோகரன் குளிக்க வந்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ராஜ குமார் மாமனாரின் வாயில் துணியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராஜகுமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.