Accused pt desk
குற்றம்

கர்நாடகா: காங்கிரஸ் எம்எல்ஏ-வை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இருவர் கைது

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடகாவின் மைசூரு சாமராஜா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஹரிஷ் கவுடா (51). இவர், கடந்த மாதம் பெங்களூரு சி.சி.பி. போலீசில், புகார் அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தேன். அப்போது அந்த அறைக்கு ஒரு பெண் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டுவிட்டு, அந்த அறையில் இருந்து சென்றுவிட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிஷ் கவுடா

இந்நிலையில், என் மொபைல் நம்பருக்கு இரண்டு மொபைல் நம்பர்களில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள், ஹோட்டலில் நீங்களும், பெண்ணும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. அதை வெளியிடாமல் இருக்க, நாங்கள் கேட்கும் போதெல்லாம் கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில், சி.சி.பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், ஹரிஷ் கவுடாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, மைசூரை சேர்ந்த சந்தோஷ், புட்டராஜ் ஆகிய இருவரை சிசிபி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.