accused pt desk
குற்றம்

தூத்துக்குடி: காதலனை அடித்து விரட்டிவிட்டு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது

webteam

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும், அவரது காதலனும் நேற்றிரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த இரு இளைஞர்கள், காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

sea shore

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் இருவரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, தூத்துக்குடி திம்மையார் காலனி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் வேல்முருகன் (35), லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த யோசேப் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த மகளிர் காவல்நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.