குற்றம்

மும்பை: ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்த டிவி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்

Veeramani

மும்பையில் 74 வயதான டிவி நடிகை ஒருவர், ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்றபோது சைபர் மோசடி மூலமாக ரூ.3.05 லட்சத்தை இழந்துள்ளார்.

பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய 74 வயதான நடிகை ஒருவர் மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, புனேயில் நடக்கும் ஒரு விருந்துக்கு மதுபானத்தை பரிசாக கொடுக்க தான் விரும்பியதாகவும், அதற்காக இணையதளம் மூலமாக பெற்ற ஒரு எண்ணுக்கு போன் செய்து விஸ்கிக்கு  ஆர்டர் செய்து ரூ.4,800 பணம் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு டெலிவரி கிடைக்கவில்லை. அந்த எண்ணுக்கு மீண்டும் போன் செய்து பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மோசடி நபர் நடிகையின் டெபிட் கார்டு விவரங்களையும் ஓடிபி எண்ணையும் வாங்கிக்கொண்டார், இதன்பின்னர் பல பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.3.05 லட்சம் ரூபாய் அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.