Tragedy pt desk
குற்றம்

திருச்சி: நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - இளைஞர் வெட்டிப் படுகொலை; இருவர் கைது

webteam

செய்தியாளர்: நிக்சன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Arrested

இந்நிலையில் நேற்று இரவு நவீன், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லால்குடி மதுபான கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நவீனுக்கும் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த நவீன் குமாரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் சிலர் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஆங்கரை பகுதியைச் சேர்ந்த கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அரசு மருத்துவமனை

மேலும் முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ளதால் இந்த கடையை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.