குற்றம்

இரவு தூங்கி காலையில் சடலமாக கிடந்த மாமியார்.. விசாரணையில் வெளிவந்த மருமகளின் செயல்!

Sinekadhara

திருப்பத்தூர் அருகே வீட்டின் வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மருமகள் மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரும் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகனான ஏழுமலைக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குனிச்சி பகுதியில் உள்ள பாரதி என்கிற அம்சா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு குனிச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அம்சாவும் பெரிய குனிச்சி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனும் ஒன்றாக படித்து வந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் பள்ளி பருவத்திலேயே காதல் மலர்ந்ததாகவும், இதனிடையில் ஏழுமலைக்கும் பாரதிக்கும் திருமணம் நடைபெற்றதால் ஏழுமலைக்கு தெரியாமல் கார்த்திகேயனுடன் அம்சா திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையில் நேற்று இரவு மது போதையில் இருந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய சகோதரரான 17 வயது சிறுவன் இருவரும் அம்சா வீட்டுக்குச் சென்றனர். அப்போது உறங்கிக் கொண்டிருந்த அம்சாவின் மாமியாரான ராமரோஜா தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்து வருகிறார் என்ற காரணத்தால் கார்த்திகேயன் அம்சா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து கம்பியால் கழுத்தை இறுக்கி அங்கேயே கொலை செய்துவிட்டு இருவரும் தப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஒன்றும் தெரியாதது போல் அம்சா வீட்டின் உள்ளே சென்று உறங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காலையில் ராமரோஜா இறந்து கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கந்திலி போலீசார் கொலை செய்த நபர்களை தேடி வந்தனர். அதன்படி அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கார்த்திகேயனை பிடித்து விசாரித்ததில் மூவரும் சேர்ந்து கழுத்து நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.