குற்றம்

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மனைவிக்கு கொலை மிரட்டல்: கனகராஜின் இளைய சகோதரர் கைது

kaleelrahman

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் இளைய சகோதரர் பழனிவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் பணிக்கனூர் பகுதியில் கனகராஜ் பெயரில் உள்ள நிலத்தை உறவினர் ஒருவர் விலைக்கு கேட்பதாக சென்னையில் வசிக்கும் கனகராஜின் மனைவி கலைவாணியை கனகராஜின் இளைய சகோதரர் பழனிவேல் வரவழைத்துள்ளார்.

இதையடுத்து நிலம் விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கலைவாணி அளித்த புகாரால்தான் தனது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டதாகவும், அந்த புகாரை வாபஸ் பெறுமாறும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கலைவாணி இதுதொடர்பாக ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் பழனிவேல் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார்.

இந்தப்புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் பழனிவேலுவை கைது செய்தனர். கொடநாடு வழக்கு தொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது சகோதரர் பழனிவேலுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.